உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, March 20, 2009

நிஜமாகவே பொய்

திரையில் வில்லு படத்தை பார்க்கின்றீர்கள். அது இரு பரிமாணம்(2D). ஆனாலும் Dolby Surround DTS எஃபெக்ட்டெல்லாம் கொடுத்து திரையிலில் அதை நிசப்படுத்த பார்ப்பார்கள். அங்கு நம் காதுகள் ஏமாந்திருக்கும்.
அதையே ”மை டியர் குட்டிச் சாத்தான்” படம் பார்த்த மாதிரி 3D மூக்குக்கண்ணாடி போட்டு பார்த்தால் படம் முப்பரிமாணத்தில் இன்னும் எபக்ட் ஏறி நிஜமாகவே நம் கண் முன்னே நடப்பது போல தோன்றும். அங்கு நம் கண்கள் ஏமாந்திருக்கும்.
ஆனாலும் நான்கு பரிமாண எபக்ட் கிடைக்க ”பிரஸ்மீட்டில்” நிஜமாகவே நாமங்கிருந்திருக்க வேண்டும். நான்காவது பரிமாணமாக அங்கு நம் உணர்வில் நேரமும் கலப்பதால் இன்னமும் சுவாரஸ்யம் கூடுகின்றது. ஆனாலும் எல்லாமே பொய். எல்லா பரிணாமங்களிலும் நம் அங்கங்கள் அநியாயத்துக்கும் ஏமாற்றப்பட்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு நான்காவது பரிமாணமாக மேலே நாம் பார்த்த ”நேரம்” என்பதே பொய் என்கின்றார்கள். பூமியை விட்டு விட்டு விண்ணில் வெகுதூரம் சென்றுவிட்டால் நாளென்றுமில்லை நேரமென்றும் இல்லை.இப்படி நான்காவது பரிமாணமே மாயை என்றாகும் போது மற்ற மூன்றும் கூட மாயையாகத்தான் இருக்க முடியுமோ? நேரம் என்று ஒன்று இல்லாத போதே நாம் இருக்கின்றது எனப்பட்டிருக்கின்றோம். மொத்தத்தில் இந்த நான்கு பரிமாண உலகில் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம் போலிருக்கின்றது. ஒரு வேளை நான்கையும் தாண்டி ஐந்து ஆறென பல பரிமாணங்கள் உலகில் இருக்கலாமோ? நம் புலன்களால் தான் அதை உணரமுடியவில்லையோ?

அதெல்லாம் இருக்கட்டும் நான் சொல்வதற்கு பதில் சொல்லேன் என்றான் கோபால்."பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர அதை ஒரு நாளென்கிறோம். சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றிவர அதை ஒரு மாதமென்கின்றோம். பூமியானது சூரியனை ஒரு முறை சுற்றி வர ஆகும் சமயத்தை ஒரு வருடம் என்கின்றோம். இதெல்லாம் தெளிவாக புரிகின்றது. ஆனால் வாரத்துக்கு ஏழு நாட்கள் என்ற கணக்கு எங்கிருந்து வந்தது? புரியாத புதிராக இருக்கின்றதே" என்றான்.

நாள், மாதம் மற்றும் வருடங்களின் வரவு பூமி,சந்திரன்,சூரியனின் நகர்வுகளை வைத்து கணக்கிடும் போது வாரம் மட்டும் எங்கிருந்து வந்தது. அது நமக்கு நெஜமாகவே தேவைதானா எனக் கேட்டான். அடப்பாவி உருப்படியா இருக்கின்ற அந்த வீக்கெண்டுக்கும் ஆப்புவச்சுடுவ போலிருக்கே என்றேன் நான்.

(மேலே படம்: தெருமுனைகளில் 3D படம் வரைந்து இல்லாததை இருப்பது போல் படைக்கும் Julian Beever-ன் 3டி கோக் போத்தல் .மேலும் படங்களுக்கு இங்கே சொடுக்கவும். http://dalesdesigns.net/Beever.htm)


ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது
அது இல்லாமைக்குச் சான்றில்லை










நா.பார்த்தசாரதியின் புதினம் ”சமுதாயவீதி” மென்புத்தகம் இங்கே தமிழில்.Na.Paarthasarathy "Samuthaaya Veethi" novel in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Monday, March 16, 2009

பாவம் கடவுள்

நிகழ்காலத்தில் நிகழ்ந்துவரும் சில கண்டுபிடிப்புகளை பற்றி கேள்விப்படும் போது நமக்கு தலையே சுற்றிக் கொண்டு வரும் போலிருக்கின்றது. அதிலும் நம்ம ஊர் பசங்க கலக்குகின்றார்கள் என அறியும் போது இன்னும் இரட்டிப்பு் சந்தோசம்.

ஒரு புத்தகக்கடைக்கு சென்றிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒரே விஷ்யத்தை சொல்லிக்கொடுக்க மூன்று வேறு புத்தகங்கள் அலமாரியில் உள்ளன. இதில் எதை தெரிந்தெடுப்பது என நீங்கள் குழம்ப இணையமிருந்தால் பலரின் புத்தகவிமர்சனத்தையோ அல்லது ஸ்டார் ரேட்டிங்கையோ பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம். கையடக்கமாயிருக்கும் பிளாக்பெர்ரியை தட்டித் தட்டி அந்த மூன்று புத்தகங்களைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்வதற்குள் விடிந்து விடும். அதற்கு பதிலாக நீங்கள் அந்த புத்தகத்தை கையில் எடுத்ததுமே உங்கள் உடம்பிலிருந்து புறப்படும் ஒரு ஒளிக்கற்றை (projector) அப்புத்தகத்தை பற்றிய விவரத்தை அப்புத்தத்திலேயே ஸ்கிரீனிட்டு காட்டினால் எப்படி இருக்கும்? அப்படியே அந்த ஸ்கிரீனை தட்டித் தட்டி வேறெங்காவது விலை குறைவாக இப்புத்தகம் கிடைக்குமாவெனவும் பார்க்கமுடிந்தால்..

பேருந்தில் செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். புதுப்படம் ஒன்று வெளிவந்திருக்கிறதாம். டிரயிலர் பார்க்க ஆசை....பூம்....மீண்டும் உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் செய்யப்படும் அந்த ஒளிக்க்ற்றை யூடியூபில் டிரயிலரை தேடி அந்த செய்திதாளிலேயே வீடியோவாக காட்டும்.டூ..மச்சாக இருக்கின்றதா?

கடிகாரம் கையில் இல்லை என வைத்துக்கொள்வோம்.டைம் சோன் மாறி சால்ட்லேக் சிட்டியில் வந்திறங்கியிருக்கின்றீர்கள். ...பூம்...கையில் கடிகாரம் போல் ஒரு வட்டம் வரைந்தால் போதும் கைக்கடிகாரம் உங்கள் கையில் ஒரு ஒளிவட்டமாகத் தோன்றும்.

இப்படி இணைய கம்ப்யூட்டிங்கை கீபோர்டு இன்றி ஒளித்திரையின்றி அன்றாட பொருட்களின் மேல் செய்ய முனைந்திருக்கின்றார்கள். அங்கு உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் ஆகும் ஒளிக்கற்றையே திரை. உங்கள் விரல் அசைவுகளே தகவல் உள்ளீடும் கருவி.

கேமராவெல்லாம் வேணாம். விரல்களை கட்டமிட்டு காண்பித்தாலே படம் கிளிக்காகி விடும்.
கைத்தொலைப்பேசியும் வேணாம். கையிலேயே எண்களை புரஜெக்ட் செய்து காட்டி எண்களை தட்டி கால் செய்யலாம்.

மேலே படங்களை பார்த்தாலே புரியும். ஒன்றும் புரியவில்லையா இந்த வீடியோவை ஓட விட்டுப்பாருங்கள். புரியலாம்.

http://www.youtube.com/watch?v=nZ-VjUKAsao

குஜராத்தில் BE-யும் மும்பை IIT யில் MDes -ம் முடித்து விட்டு மேற்கே பறந்த பிரனாவ் மிஸ்டிரி(Pranav Mistry) MIT யில் இப்போது செய்துவரும் இந்த புராஜெக்டின் பெயர் SixthSense.

அம்பதோ அறுவதோ வருடம் கழித்து மூச்சு நின்று சொர்க்கம் போனால் அங்கு இதெல்லாம் இருக்குமாப்பாவென கோபாலைக் கேட்டேன்.
”பாவம்டா கடவுள்” என்றான்.



நண்பனை காணாவிடத்திலும்,
ஆசானை எவிடத்திலும்,
மனையாளை பஞ்சணையிலும்,
வேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.









ரமணிசந்திரன் "நாளை வரும் நிலவு" புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ramanichandran Naalai Varum Nilavu Novel in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Thursday, March 12, 2009

பீச்சு வாக்கில்

கை நிறைய பணம் இருக்கும் ஆனால் பொருட்கள் எதுவும் வாங்க முடியாது. அவ்வளவு விலை அதிகமாயிருக்கும்.இது இன்பிளேசன்.தமிழில் பணவீக்கம் என்பார்கள். இன்றைய ஜிம்பாவேயின் நிலை இதுதான்.

கடை நிறைய விலை மலிவாக பொருட்கள் இருக்கும் ஆனால் அதை வாங்க கையில் பணம் இருக்காது.இது டீபிளேசன். அமெரிக்காவின் இன்றைய நிலை இதுதான். மின்னணு பொருட்களின் விலைகள் கன்னாபின்னாவென குறைந்திருக்கின்றன. வீடுகள் விலையும் தான்.ஆனால் மக்களிடையேயோ வாங்கும் திறன் இல்லை அல்லது பயந்து போய் வாங்க மறுக்கின்றார்கள். முன்னைய பண வீக்கத்தை அப்படியும் இப்படியுமாய் கட்டுப்படுத்தி விடலாமாம். டீபிளேசனை எப்படி கட்டுபடுத்துவது.ரொம்ப கஷ்டமாம்.

உலக பெருசுகள் எல்லாம் ஒன்று கூடி இதற்கொரு தீர்வு காண பேசும் போது ஒரு குளோபல் டீல் கொண்டுவர வேண்டும் என்றார்கள்.சிக்கல்கள் தான் அநேக வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. அதனால் இதுபோன்ற தருணங்களை இழந்துவிடக்கூடாது. உலக மக்கள் ஒன்றிணைய வேண்டும் சர்வதேச அளவில் ஒரு தீர்வு காணவேண்டும் New World Order என்றெல்லாம் வாய்கிழிய பேசுகின்றார்கள். வீட்டுக்கு வந்ததும் “Be Indian Buy Indian" மாதிரி "American products are our first choice" கணக்காலான சுதேசித்துவம் அல்லது protectionism பேசுகின்றார்கள். இரண்டில் எது வெல்லப்போகின்றதோ தெரியவில்லை. இன்று சுதேசித்துவம் முன்னணியில் இருப்பது போல் தெரிந்தாலும் போகப் போக NWO-தான் வெல்லும் என்பது என் கணக்கு.

இங்கே பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறைக்காக விஷேசத்துக்காக இந்தியா செல்லுமுன் கொஞ்சம் யோசிப்பது நல்லது. பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறை முடிந்து அமெரிக்கா திரும்பும் போது விமானமுனையத்திலேயே அடையாளம் காணப்பட்டு உங்கள் சேவை இப்போதைக்கு எங்களுக்கு தேவை இல்லையென சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதாக கேள்விப்பட்டேன். புதிதாக H1B விண்ணப்பிப்பவர்களுக்கும் நிறைய கெடுபிடிகளாம். கிளையண்ட் லெட்டர் வரைக்கும் கேட்கின்றார்களாம். இங்கேயே இத்தனை மில்லியன்பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்களே அவர்களில் உங்களுக்கு யாரும் கிடைக்க வில்லையாவென நிறுவனங்களை கேட்கின்றார்கள். எல்லாம் பேச்சு வாக்கில் Beach Walk-ல் கேள்விப்பட்டவை. உறுதிப்பட சொல்ல மூலம் எதுவும் இல்லை.

மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஊர் வருகின்றேன்.Little excited. ஏழு ஆண்டுகளுக்குப் பின் சென்னை வருகின்றேன். உஸ்மான் ரோட்டில் மேம்பாலமெல்லாம் போட்டிருப்பதாகச் சொன்னான். மாமாக்களுக்கு டிமிக்கி கொடுத்து பைக் ஓட்டிப் பழகிய இடம் அது.ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் பங்களூரும் போகலாமென உத்தேசம்.எல்லாம் புது உலகமாயிருக்கும். ஊரிலிருந்து சென்னைபோக ரயில் டிக்கட் முன் பதிவு செய்ய http://www.irctc.co.in சென்றால் சர்வதேச கடனட்டையை ஏற்றுக்கொள்ள மாட்டோமென்று விட்டார்கள். http://www.cleartrip.com உதவும் என்றான் கோபால்.தங்குவதற்கு நல்ல ஹோட்டலொன்றை கண்டுபிடிக்க வேண்டும். போகுமிடமெல்லாம் இணையம் கிடைக்குமாவென தெரியவில்லை. தேர்தல் நெருங்குவதால் மின்சார குறைச்சல் இருக்காதுவென நம்பிக்கை.

மது வலைப்பதிவின் ஐந்து ஆண்டுகள் நிறைவையொட்டி வாழ்த்துக்கள் கூறிய பத்தாம் வகுப்பு மாணவி திவ்யா முதல் 70 வயது பெரியவர் சுந்தர் வரைக்குமான அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.



வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!










காஞ்சனா ஜெயதிலகர் "மண்டியிட்டேன் மதனா..!" புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Kaanchana Jeyathilagar Mandiyidean Mathanaa Novel in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Monday, March 09, 2009

ஐந்து ஆண்டுகள்

மார்ச் ஒன்பது.
இன்றைக்கு நம் வலைப்பதிவை தொடங்கி சரியாக ஐந்து ஆண்டுகள் ஆயிற்று.எவ்வளவு விரைவாக நாட்கள் ஓடுகின்றன.அன்றைக்கு ஒரு சில அளவிலேயே இருந்த தமிழ் வலைப் பதிவுகள் இன்றைக்கு அநேகமாயிரம் வலைப் பதிவுகளாக தமிழில் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்திய மொழிகள் வேறெதாவற்றில் இந்த அளவுக்கு புரட்சி இருக்கின்றதாவென தெரியவில்லை. உண்மையில் கணிணிபடித்த மேதாவிகள் பலரும் பிராந்திய மொழியில் கணிணியில் எழுதுவதையே தீண்டத்தகாது போல் பார்ப்பதுண்டு.அதையெல்லாம் தாண்டி தொழில் நுட்பத் தகவல்களை தமிழில் தந்த போது கிடைத்த வரவேற்பு எனக்கு ஆச்சரியமானது. தொடர்ந்து நண்பர்கள் கொடுத்த அளப்பறிய ஆதரவால் இன்றுவரைக்கும் அது நீடித்து வந்திருக்கின்றது. பின்னே 157 பின்னூட்டங்களை தளராமல் இட்டு உற்சாகப்படுத்திய இனிய தமிழ்நெஞ்சம் போன்றோரை என் சொல்வது. அவரும் www.tamilnenjam.org என தளம் தொடங்கி தொழில் நுட்பத்தகவல்களை தமிழில் வழங்கி விளாசிக் கொண்டிருக்கின்றார்.

கடந்த நான்காம் தியதி நமது வலைப்பதிவை RSS வழி படிப்பவர்களின் எண்ணிக்கை 2000-த்தை எட்டியது.இதில் மின்னஞ்சல் வழி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 1142.நேரடியாக தளத்துக்கு வந்து படிப்பவர்களின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 800-ஐ தாண்டும்.பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 155. ஒரு நண்பர் எழுதியிருந்தார். "வணக்கம் ,உங்கள் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவு படுத்துகின்றன ,கடந்த வாரம் குமுதம் வாயிலாக உங்கள் தளம் பற்றி அறிந்து 4 நாட்களில் 50 பிலாக்குகள் வாசித்தேன். என் போன்ற வண்பொருள் வல்லுன்ர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிகவும் மகிழ்ச்சி. நன்றிகளும் கூட.எனக்கு ஒரு ஆசை , நீஙகள் ஒவ்வொரு மணித்துளிக்கும் ஒரு blog எழுதக்கூடாதா?" என்று. ஆங்கிலத்தில் ஆயிரம் தளங்கள் தொழில் நுட்பத்தகவல்களை வழங்க இருந்தாலும் தாய் மொழியில் நாலுவார்த்தை அதுபற்றி படிக்க ஆவலுடன் நிறைய நெஞ்சங்கள் இருக்கின்றன என புரிந்தது. ஆனாலும் கணிணி சில்லுகளைப் பற்றி எழுதுபவனெல்லாம் சுஜாதாவாகிடமுடியுமா என்ன? ஆயினும் நிஜத்திலேயே சில சுஜாதாக்கள் தமிழில் எழும்பினால் தமிழன் அறிவியலில் இன்னும் ஆர்வமாகி அவன் கடல் மூழ்கி கப்பல் கட்டுவான்,ஒளியை பீறிட்டுச்செல்லும் விமானம் கட்டுவான், விண்ணை அளக்கும் கணிணி கட்டுவான், ஈழத்துக்கு ஒரு பாலமமைப்பான்.

ந்த ஐந்தாவது ஆண்டில் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஃறிணைப் பொருட்களெல்லாம் சீக்கிரத்தில் உயிர் கொண்டு விடும் என்பது எனது எண்ணம். வீட்டிலிருக்கும் பொருட்களும் சரி ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களும் சரி முன்னெப்போதும் இல்லாத அளவில் "ஸ்மார்ட்" ஆகிக்கொண்டே வருகின்றன. அதன் முக்கிய பங்களிப்பு இவையெல்லாம் எளிதாக இணையத்தில் இணைக்கப்படுதல் தான். இப்போதெல்லாம் வாகனத்தில் பொருத்தப்படும் மைரோப்ராசசர்கள் உங்கள் கார் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அதன் சர்வீஸ் சென்டருக்குசொல்லிக் கொண்டிருக்க வீட்டிலிருக்கும் "கேஸ்" சிலிண்டரோ அதில் கேஸ் தீர்ந்துகொண்டிருப்பதை அதன் நிறுவனத்துக்கு அலெர்ட் செய்திருக்கும் வாய்ப்புண்டு. இதெல்லாம் சாத்தியமாக கட்டற்ற இணைய இணைப்பு தேவை.அது வைமேக்ஸ்(WiMAX) வடிவில் சாத்தியமாகும் போல் தோன்றுகிறது.

WiFi என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதாவது வீட்டில் அல்லது விமானநிலையத்தில் அல்லது காஃபிஷாப்பில் மட்டும் இஷ்டத்துக்கு இணைய இணைப்பை வழங்கும் இணைப்பு ஆனால் WiMAX-ஸோ நம்மூரின் மூலை முடுக்கெல்லாம் இணையத்தை வயர்லெஸ்ஸாய் வழங்க உதவ வந்திருக்கும் புதிய தொழில் நுட்பம். இது இன்னும் இதன் ஆரம்பகட்டங்களிலேயே உள்ளது. ஒரு நகரமுழுவதும் WiFi செய்யப்பட்டால் எப்படி இருக்கும் அப்படி இருக்கும் வைமாக்ஸ். அதிகபட்சமாக 70Mbps வேகம்.ஒரு டவர் வைத்தாலே அதன் 20 கிலோமீட்டர்கள் சுற்றளவுக்கு அதிவேக இணைய இணைப்பு வயர்லெஸ்ஸாய் கிடைக்கும்.Worldwide Interoperability for Microwave Access என்பதை தான் WiMAX என்கிறார்கள். இதை 802.16 என்றும் சொல்வதுண்டு (MAN-Metropolitan Area Network).இது சீக்கிரத்திலேயே கேபிள் மற்றும் DSL இணைய சேவைகளை தூக்கி சாப்பிட்டாலும் சாப்பிட்டுவிடும்.

சென்னையின் சந்துபொந்துகளையெல்லாம் பாவிக்கும் ஒரு WiMAX ரிலையன்சில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
மேலதிக தகவல்கள் இதோ
150 Kbps - Rs.750/- Per month
400 Kbps - Rs.999/- Per month
600 Kbps - Rs.1399/- Per Month
1000 Kbps - Rs.2199/- Per Month

Installation Charges - Rs.500/- Only
Security Deposit - NIL

For further details call at 9962 200 300
http://www.reliancewimax.in

Aircel-ல்லும் WiMAX சேவையை சென்னையிலும் கோயம்புத்தூரிலும் வழங்குவதாக கேள்வி.



வெற்றி என்பது என்ன?
உங்கள் கையொப்பம், ஆட்டோ கிராப் ஆனால் அதுவே வெற்றி.






சி.மகேந்திரன் "ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம்..." இங்கே தமிழில் மென் புத்தகமாக. C.Mahendran Oru Vannathupoochiyin Marana Saasanam in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Wednesday, March 04, 2009

மவுனமாய் சாதனை

1Gbக்கு ஒரு டாலர் என்ற கணக்கில் ஹார்ட்டிரைவுகள் விற்ற காலங்கள் நினைவுக்கு வருகின்றன.நான் கூட இரு வருடங்களுக்கு முன்பு 500 Gb external ஹார்டிரைவ் ஒன்றை 200 டாலருக்கு வாங்கிய நியாபகம். நேற்றைக்கு 1.5Tbஹார்டிரைவ் 118 டாலருக்கு பார்த்தேன். மடமடவென விலை இறங்கியிருக்கின்றது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் எனப்படும் மேசை கணிணிகளின் அந்திமக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் இடத்தை ரொம்பவும் ஆக்கிரமிக்காத மடிக்கணிணிகளே இன்றைக்கு வீடுகளில் ஒன்றுக்கு இரண்டு கிடக்கின்றன.1.5Tb external செங்கற்கட்டியை மடிக்கணிணியின் USB போர்ட்டில் செருகிக்கொண்டு நகர்வதில் நம் "Mobility"-யே தொலைந்துவிடுகின்றது. அதிலிருக்கும் மூவி ஒன்றை பார்க்க வேண்டுமானால் ஒரு மூலையிலேயே ஒண்டி இருக்க வேண்டுமாக்கும். External ஹார்டிரைவை ஒரு மூலையிலே சாத்தி வைத்துக் கொண்டு நாம் நகர்ந்துகொண்டே அதிலிருக்கும் கோப்புகளை படிக்க வசதியுள்ளதா?

இரண்டு சாத்தியங்கள் உள்ளன.
ஒன்று உங்கள் external ஹார்டிரைவை வாங்கும் போதே அது NAS வசதி கொண்டதாய் இருப்பதாய் பார்த்துக் கொள்ளவேண்டும். விலை கொஞ்சம் அதிகம்.
இரண்டு புதிதாக வந்துள்ள Pogoplug.
http://www.pogoplug.com
இந்த வெள்ளை நிற டப்பாவின் ஒரு முனையில் USB போர்ட்டும் மறுமுனையில் நெட்வொர்க் போர்டும் இருக்க அதன் USB போர்டில் உங்கள் external ஹார்டிரைவை இணைத்துவிட்டு அந்த போகோபிளக்கை உங்கள் வீட்டு கம்பியில்லா நெட்வொர்க்கில் இணைத்தால் You are done. அந்த external ஹார்டிரைவை உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் அணுகலாமாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஹார்டிரைவுகளை கூட நீங்கள் அதனோடு இணைத்துக் கொள்ளலாம். விலை 79 டாலர். இது போன்ற ஒரு அற்புத பொட்டிக்காகத் தான் நான் காத்திருந்தேன்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஏன் இது மாதிரியான "obvious"-ஆன படைப்புகளை கூட ஐ.டியில் உச்சத்திலிருக்கும் நம்மால் உருவாக்க முடியவில்லை அல்லது உருவாக்காமல் இருக்கின்றோம். சூப்பர் கணிணிகளை செய்கின்றோம் என்கின்றார்கள். நமக்கு தெரிந்து எதாவது புதுமையான ஹார்டுவேர் நம்மூரிலிருந்து ஜனனமாகியிருக்கின்றதா? ஒருவேளை காசுள்ள நம் பெருசுகளுக்கு R&D ல் பணம் போட மனமில்லையோ? யாரோ வகுத்துச் சொன்னதை தானே நாம் "கோட்"களால் படைக்கின்றோம் புதிதாக எதாவது செய்தோமா?.Hotmail-யை உருவாக்கிய சபீர்பாட்டியாவும் கொஞ்சம் புகழ் கொண்ட நம் Tally-யையும் தவிர வேறு நினைவுக்கு வரவில்லை. அணுகுண்டால் எதிரியை அதிரவைத்தான் ஒரு தமிழன்.இன்னொருவனோ ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை அள்ளி வந்திருக்கின்றான்.இன்னொரு தமிழன் சந்திரனுக்கே உளவு அனுப்பினது நினைவிருக்கலாம். இப்படி நாம் அவரவர் துறையில் மவுனமாய் சாதித்தால் கையாலாகாதவன் கூட எதாவது காரியமாகப் பார்ப்பான் போலிருக்கின்றது.
(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ? I always do)


நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.













ஆர்.அசோகன் "கடல் கடந்து கரையேறலாம்" ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா மென்புத்தகம் இங்கே தமிழில்.R.Ashokan "Kadal kadanthu karaiyeeralaam" exports business encyclopedia Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Sunday, March 01, 2009

தேவை இன்னொரு இன்னோவேசன்

கழிந்த முறை மிச்சிகனிலுள்ள இந்த குறும்நகரத்திற்கு வந்திருந்த போது திரும்புமிடமெல்லாம் நிறைய Desi-க்கள் இருந்தார்கள்.இன்றைக்கு நிலவரமே மாறியிருக்கின்றது. ரொம்ப சீரியசான புராஜெக்ட்களைத் தவிர மற்ற புராஜெக்ட்களையெல்லாம் கழட்டி விட்டிருக்கின்றார்கள். நம்மாட்களை காணோம்.நிறைய பழைய ஹான்டாக்களும் டொயோடோக்களும் விற்பனைக்கு வந்துள்ளன.பொருளாதார மந்தநிலை நிறுவன வருவாயை பாதித்திருக்கின்றதோ இல்லையோ சும்மாவாச்சும் ரிசசன் என்ற பெயரைச்சொல்லி தலைகளை கொய்யும் வேலையில் பல நிறுவனங்கள் ஆதாயம் தேடத்தொடங்கியுள்ளன. இதற்கிடையே தினசரி வேலை இழப்புகளை சுடச்சுட சொல்ல layoffdaily.com என தளங்கள் வேறு. என்பாடும் கோபால் பாடும் சீக்கிரத்தில் திண்டாட்டம் தான். பரியும் நேகாவும் ஹெல்த்கேரில் இருப்பதால் தற்போதைக்கு தப்பித்திருக்கின்றார்கள்.

வெற்றிகரமாக முதலாளித்துவத்தை மண்ணை கவ்வ வைத்த நிதி நிறுவனங்களில் எத்தனை இன்றைக்கு இருக்கும் சிக்கல்களையெல்லாம் தாண்டி தேறுமென தெரியவில்லை. புதிய படைப்புகளை படைத்து முதலாளித்துவத்திற்கு மரியாதை வாங்கி கொடுத்த மைக்ரொசாப்ட், ஆப்பிள்,கூகிள் போன்ற நிறுவனங்கள் கூட இந்த கலகத்தில் தள்ளாடுகின்றன. ஒரேயடியான சோசியலிசமும் அபாயம் தான் என்பார்கள். எனக்கென்னமோ நம்மூர் போல பிஃப்டி, பிஃப்டி பிடித்திருக்கின்றது.பங்குசந்தை விபரீத விளையாட்டில் விளையாடாமல் தேமேவென கொரித்து கொரித்து வங்கியில் சேமிப்புக்கணக்கில் போட்டு வைத்துள்ள பணத்துக்கூட பாதுகாப்பு இல்லையெனில் என் சொல்வது.

வீட்டில் குழாய் உடைந்து போனால் முதலில் தண்ணீரை அடைத்து விட்டு பின்பு பழுதுபார்ப்பார்கள் பிளம்பர்கள். இங்கேயோ பழுதுபார்ப்பதை விட்டு விட்டு டிரில்லியன் கணக்கில் டாலர்களை அச்சடித்துக் கொட்டுவதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.சீக்கிரத்தில் அது கழுத்து வரைக்கும் வீங்கிவிடும் போலிருக்கின்றது. போகின்ற போக்கில் நான் சொல்லிக் கொண்டே போகின்றேன். களமுனையில் இருப்பவனுக்குத்தான் தெரியும் அதன் மத்தள இடி.

90-களில் மெல்ல மெல்ல எட்டிப்பார்த்த பொருளாதார மந்தநிலை கணிணிப் புரட்சி வந்ததால் காணாமல் போயிற்றென்பார்கள். கணிணி மற்றும் இணையத்தால் இளைஞர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. கோபால்கள் அங்கும் இங்கும் பறந்தார்கள். அது நம்மை கொஞ்சம் பிசியாக வைத்துக்கொண்டது. இன்றைக்கு உருவாகியிருக்கின்ற மந்த நிலையிலும் மக்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள ஏதாவதொரு இன்னொரு தொழில் நுட்பப்புரட்சி தேவைப்படுகின்றது. ஆமாம் இன்னொரு இன்னோவேசன் அவசரமாகத் தேவை.

ஜனங்களை சுறுசுறுவென வைத்துக்கொள்ள இப்படி எதாவது வராவிட்டால் அவனவன் அம்புகளை எடுத்துக்கொண்டு பின் சண்டைக்குத்தான் போவான்.உணவுச்சங்கிலி போட்டியில் சமச்சீர்நிலை அடைய மில்லியன் பேரைக் கொல்வான்.பின் சர்வச் சாதாரணமாக அதை மூன்றாம் உலகப்போர் என்பான்.




"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."











சுஜாதா "ஏன்? எதற்கு? எப்படி?" தமிழ் மென்புத்தகம். Sujaatha "Yean Yetharku Yeppadi" in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்