உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, February 24, 2011

வாமுக:பிரிண்டர்கள்

வழக்கம் போல இந்த முறை "வாங்கும் முன் க‌வ‌னிக்க‌" வ‌ரிசையில் கணிணி பிரிண்டர்கள் பற்றி பார்க்கலாம்.குட்டீஸ்களுக்கு கலரிங் காகிதங்கள் அச்செடுத்து கொடுத்து அவர்கள் கொட்டத்தை அடக்குவதிலிருந்து, காசை மிச்சப்படுத்த கூப்பன்கள் பிரிண்ட் செய்வதுவரை பிரிண்டர்களின் அவசியம் வீட்டுக்கு வீடு மிக அதிகமாகிவிட்டது. இப்போது வீட்டுத் தேவைக்காக நாம் பிரிண்டர் ஒன்று வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டுமென கவனிக்கலாம்.

1.இங்க் ஜெட்டா அல்லது லேசரா?
அதிகம் பயன்படுத்தாமல் அவ்வப்போது எப்போதாவது கலரும், கறுப்பு வெள்ளையுமாக பிரிண்ட் செய்பவர்கள் இங்ஜெட் பிரிண்டர்களை தெரிவு செய்யலாம். விலை மலிவான தெரிவு அது. அதுவே நீங்கள அதிக அளவு பிரிண்ட் செய்பவர்கள் ஆனால் கறுப்பு வெள்ளை மட்டும் போதும் என்றால் மோனோ குரோம் லேசர் பிரிண்டர்களை தெரிவு செய்யலாம். மோனோகுரோம் லேசர் பிரிண்டர்களின் விலைகள் இப்போது ஒரு இங்ஜெட் பிரிண்டரின் விலைக்கு குறைந்து விட்டது.அதிகமாக வேகமாக கலர் கலராக ஹெவிடூட்டி பிரிண்ட் செய்யவேண்டுமென விரும்புபவர்கள் கண்டிப்பாக சேரவேண்டிய இடம் கலர் லேசர் பிரிண்டர்கள்.

2.ஆல்-இன்-ஒன்
பெரும்பாலான இங்ஜெட் பிரிண்டர்கள் பேக்ஸ்/ஜெராக்ஸ்காப்பி/ஸ்கேன் போன்ற அம்சங்களோடு தான் வருகின்றன. ஆனாலும் நீங்கள் உங்களுக்கு தேவையான அம்சங்கள் அக்குறிப்பிட்ட பிரிண்டரில் இருக்கின்றதாவென உறுதிபடுத்திக் கொள்வது மிகவும் அவசியம். கொஞ்சம் கொஞ்சமாக பேக்ஸ் வசதி பிரிண்டர்களிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. ஆல்-இன்-ஒன் லேசர் பிரிண்டர்கள் பெரும்பாலும் வண்ணப் பிரிண்டர்களாதலால் விலை கூரையை எட்டும். சாதாரண வீட்டு தேவைகளுக்கு ஆல்-இன்-ஒன் இங்க்ஜெட் வண்ண பிரிண்டரே ரொம்ப மதி.

3.வைஃபை கண்டிப்பாக வேண்டும்
USB போர்ட்டும் கேபிளும் மட்டும் கொண்டு பிரிண்டர் வந்தால் மிகப்பெரிய தொல்லை. அச்செடுக்க எப்போதும் பிரிண்டர் அண்டையிலேயே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டி வரும்.வைஃபை எனப்படும் வயர்லெஸ் வசதி இருந்தால் சுதந்திரமாய் உலா வரலாம். எனவே wifi வசதியுள்ள பிரிண்டராய் பார்த்து வாங்குவது மிகவும் அவசியம்.

4.பராமரிப்பு செலவு
பிரிண்டர்கள் பராமரிப்பு செலவுகளோடு வருகின்றன. குறிப்பாக இங்க் கார்ட்ரிட்ஜ்கள். எனவே பிரிண்டர் வாங்கும் போது முன்பே அதற்கான இங்க் கார்ட்ரிட்ஜ்கள் விலை, ஒரு கார்ட்ரிட்ஜ்ஜால் எத்தனை அச்சுகள் எடுக்கலாம், எதாவது குறிப்பிட்ட தர அல்லது அளவு காகிதம் பயன்படுத்த வேண்டுமா? அப்படியெனில் அதன் விலை என்ன போன்றவற்றை நாம் ஆரம்பத்திலேயே கணக்கிட்டுக் கொள்வது நல்லது.

5.பிற வசதிகள்
மொபைல் பிரிண்டிங் - கைப்பேசியிலிருந்து அல்லது ஐபேட் போன்ற டேப்ளட்களிலிருந்து நேரடியாக அச்செடுத்தல்.
டூப்ளக்சிங் - காகித்தின் இருபுறமும் பிரிண்ட் செய்குதல்.
இண்டர்நெட் பிரிண்டிங் - உலகின் எந்த மூலையிலிருந்தும் பிரிண்ட் செய்யும் வசதி.
பிரிண்டர் ஆப்ஸ்- நேரடியாக பிரிண்டர் டச் ஸ்கீரீனை தட்டி சுகோடுகள் /கோலங்கள் /குறுக்கெழுத்து போட்டிகள் /வாழ்த்து அட்டைகள் அச்சிடும் வசதி.
இந்த வசதிகளெல்லாம் உங்களுக்கு வேண்டுமெனில் பிரிண்டர் வாங்கும் போதே நினைவில் கொண்டு தீர விசாரித்து வாங்குவது நல்லது.

Lighter side மேலே படம் : How Babies Are Born These Days??!!

எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதே வேளையில் தெரிந்து கொண்டதாக காட்டிக் கொள்ளாமலும் இருங்கள் - அனாய்ஸ்நின்

செங்கை ஆழியான் ”சித்திரா பவுர்ணமி” Sengai Aliyaan Chithra Pouranami Tamil Novel


Email PostDownload this post as PDF

Friday, February 18, 2011

மீண்டும் வரும் பன்னிரண்டாமவர்

ஸ்லாத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பல தடைகள் வருவதுண்டு. உதாரணமாக இஸ்லாமிய கட்டுரைகளை வாசிக்க நேரிட்டால் அதில் மிஃராஜ், ஸ்ஜ்தா, மவ்லிது, தவ்ஹீத், ஜமாஅத் என வரும் அநேக புரியாத அரபிச்சொற்கள் நம் ஆர்வத்தை குறைக்கும். சரி கட்டுரைகள் தான் அப்படி சொற்பொழிவாவது கேட்கலாமென்றால் தமிழ் இஸ்லாமியர் கூட அரபியில் தான் பேசத் தொடங்குகின்றார். அவ்ளோதான் இனி நமக்கு ஒன்னுமே புரியப்போவதிலை என வீடியோ கிளிப்பை மூடப்போகும் போது நல்லவேளை தமிழில் பேசத் தொடங்குகிறார்கள்.

இஸ்லாம் என்றொரு மிகப்பெரிய அமைப்பு உலகெங்கும் பரவி இருந்தும் கூட அதிலிருக்கும் இரு பெரும் பிரிவுகளை பெரும்பாலோர் அறிந்ததில்லை.எலியும் பூனையுமாக சண்டை இட்டுக் கொள்ளும் அளவுக்கு அங்கே பகை உண்டு. ஈரான்-ஈராக் போர் உங்களுக்கு நினைவிலிருக்கலாம். இஸ்லாத்தை நிறுவிய முகமது நபியின் காலத்துக்குப் பின் அவரின் உண்மையான வாரிசு யார் என்பதில் தான் இந்த பிளவு தோன்றியது.முகமது நபியின் மாமனாரான அபுபக்கர் தான் அவரின் உண்மையான வாரிசு என ஒரு சாரார் சொல்ல, இல்லை இல்லை அவரின் மருமகன் அலி தான் உண்மையான வாரிசுவென இன்னொரு சாரார் சொல்ல புதுப் புது கொள்கை குழப்பங்கள் முகமது நபிக்குப் பின் இஸ்லாத்தில் புகுந்தன. பல கொலைகள் கூட இதன் காரணமாக நிகழ்ந்தன. இன்றைக்கும் அந்த விரோதம் இப்பிரிவினர்களிடையே நீடிக்கின்றது. அபுபக்கரை வாரிசாக ஏற்றுக்கொண்ட சன்னி பிரிவினர் எண்ணிக்கையில் அதிகமாகவும் (ஏறத்தாழ 80 சதவீதம்) வாழ்க்கையில் அமைதியாகவும் வாழ்ந்து இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம் என உலகுக்கு பறை சாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதே வேளையில் அலியை வாரிசாக ஏற்றுக்கொண்ட ஷியா பிரிவினரின் கொள்கை இதில் சற்று மாறுபட்டதாகும்.இங்கு கிபி 874-ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நாம் விளக்க வேண்டும்.

சியா பிரிவினர் தாங்கள் முகமது நபியின் வாரிசென நம்பும் அலியின் வாரிசு வழி வருபவர்களை தங்கள் மதத் தலைவராக ஏற்று வந்தனர். தாங்கள் மதத் தலைவராக ஏற்று வெகுவாகக் கொண்டாடி வந்த பதினோராவது இமாம் கிபி 874-ல் இறந்தபோது ரொம்பவே நொந்துபோயினர். ஏனெனில் அவரது வாரிசான அவர் மகனுக்கு அப்போது வயது ஐந்து தான் ஆகியிருந்தது. பன்னிரண்டாவது இமாமாக (12th Imam) பதவிக்கு வரவேண்டிய அந்த சிறுவன் தன் தகப்பனாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருக்கும் போதே திடீரென காணாமல் போய் விட்டான். அவன் போன இடம் இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாது. அவனை கடவுள் இப்போதைக்கு பூமியிலே மறைத்து வைத்திருக்கிறார், உலக இறுதி காலத்தில் உலகம் அமைதி இழந்து தவிக்கும் போது, மக்களெல்லாம் தங்களுக்குள்ளே போரிட்டு தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளும் போது, நாடுகளெல்லாம் தீப்பற்றி எரிந்து புகையும் போது அந்த பன்னிரண்டாவது இமாம் பூமிக்கு மீண்டும் மஹ்தியாக வந்து பூமியிலே அமைதியையும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தையும் நிலை நாட்டுவார் என்பது ஷியா பிரிவினரின் அசைக்க முடியாத நம்பிக்கை.அதானால் தான் இன்றைக்கும் ஈரான் தலைவர்கள் தாங்கள் உரையாற்றத் தொடங்கும் போதெல்லாம் மஹ்தியின் வருகை விரைவாக இருக்கட்டும் எனவும் அதற்காக தாங்கள் தயாராவதாகவும் இறைவனை வேண்டிக் கொண்டு பேச்சைத் தொடங்குவார்கள்.

சன்னி பிரிவினர் இக்கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களை பொருத்தவரை இந்த சியா பிரிவினர் எல்லோரும் தங்கள் கொள்கைகளை விட்டு ஒரு நாள் மனம் திரும்பி வரும் போது இறுதிக்காலம் வரும் எனவும் அந்த இறுதி நியாய விசாரணை நாளில் ஜெருசலேமிலுள்ள மவுண்ட் ஆலிவ்ஸ்க்கும் டோம் ஆப் தி ராக் மசூதிக்கும் இடையே முகமது நபியும், ஈசாவும் (இஸ்லாமில் யேசு ஈசா என அறியப்படுகிறார்)நிற்க்க அதில் கட்டபட்டுள்ள இறுதி தீர்ப்பு கயிறு வழியே ஒவ்வொரு ஆன்மாவும் நடந்து செல்லும். ஒரு ஆன்மா அது தான் செய்த தீமைகளையெல்லாம் விட ஒரு நன்மை அதிகம் செய்திருந்தாலும் அது பாரடைஸ் செல்லும் எனவும், ஒரு ஆன்மா அது தான் செய்த நன்மைகளையெல்லாம் விட ஒரு தீமை அதிகம் செய்திருந்தாலும் அது நரகம் செல்லும் எனவும் இவர்கள் நம்புகின்றார்கள். இப்படித்தான் இறுதி தீர்ப்பு நடைபெறுமாம். ஆனால் புனிதப்போரில் (ஜிகாத்) இறப்பவர்கள் மற்றும் கல்லெறிந்து கொல்லப்படுபவர்கள் நேரடியாக பாரடைஸ் சென்று விடுவார்களாம்.

ஈரான் நாட்டின் பெரும்பாலோர் சியா பிரிவினரை சேர்ந்தோரே. இன்றைக்கு டுனீசியா, எகிப்து, பகரின் என பல அரபுநாடுகளிலும் நடக்கும் கிளர்ச்சிகளுக்கும் புரட்சிகளுக்கும் யார் காரணமென ஈரான் அதிபர் முகமது அக்மதினஜாத் சொல்வதை கேளுங்கள் "The final move has begun. We are in the middle of a world revolution managed by this dear (12th Imam). A great awakening is unfolding. One can witness the hand of Imam in managing it,”. இப்போது புரிகின்றதா நாம் எங்கு செல்கின்றோமென்று?

நானறியவந்த தகவல்கள் சுவாரஸ்ய மிக்கதாயிருந்ததால் மேல்கண்ட பதிவை இட்டேன். இதில் ஏதேனும் தகவல் பிழையிருந்தால் நண்பர்கள் சுட்டிக் காட்டலாம். இஸ்லாம் குறித்ததான தகவல்கள் தமிழில் குவிந்திருக்கும் ஒரு தளம் ஆன்லைன் பி.ஜே.
http://onlinepj.com


Email PostDownload this post as PDF

Wednesday, February 16, 2011

வாமுக:மானிட்டர்கள்

"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌" வ‌ரிசையில் இந்த முறை மானிட்டர்கள் எனப்படும் கணினிகளின் திரைகள் பற்றி பார்க்கலாம். மடிக்கணிணிகளே மிகுதியாகிப்போன இன்றைய சூழலில் கணித்திரைகள் தேவையில்லையே எனினும், சில பல காரணங்களுக்காக கணிணி மானிட்டர்கள் உங்களுக்குத் தேவைப்படலாம். குறிப்பாகச் சொல்லப்போனால் சாதாரண மடிக்கணிணியின் சிறிய திரை அளவு மற்றும் சிறிய எழுத்துரு அளவுகள் உங்கள் கண்பார்வைக்கு வசதியாக இல்லாத போது ஒரு பெரிய மானிட்டர் வாங்குவதை குறித்து யோசிக்கலாம். அல்லது வொர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்கள் மடிக்கணிணி திரை மட்டுமல்லாமல் இன்னொரு ஸ்கீரீன் கூட (Dual screen) இருந்தால் வேலை செய்ய இன்னும் எளிதாக இருக்குமே என எண்ணினால் நீங்கள் கூடுதலாக ஒரு மானிட்டர் வாங்குவதை குறித்து யோசிக்கலாம். அப்போது நினைவில் வைக்க வேண்டிய சில குறிப்புகள்.

1.திரை அளவு:
பல்வேறு Screen Size-களில் வரும் கணித்திரைகள் இஞ்சு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன. 21” முதல் 23” அளவு வரையான மானிட்டர்கள் பிரபலம். இந்த இஞ்ச் அளவுகள் டயகணல் அளவுகளாகும். அதாவது வலது மேல் மூலையிலிருந்து இடது கீழ் மூலைவரையான இஞ்ச் அளவாகும் (படம்). விலையில் உங்களுக்கு தகுதியானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

2.திரைத் தரம்:
பெரும்பாலும் LCD மானிட்டர்கள் தான் மார்கெட்டில் உள்ளன.VN,TN,IPS போன்ற LCD நுட்பங்கள் உள்ளன. இதில் In-Plane Switching எனப்படும் IPS பேனல்கள் பெட்டர்.அவை LED Backlight ஆக இருந்தால் இன்னும் உச்சிதம். Dead pixels எதுவும் இல்லாமல் இருந்தால் அது நம் அதிஷ்டம். HD எனப்படும் High Definition அளவில் 1080p இன்றைய சராசரி உச்சம். ரெசல்யூசனுக்கு 1920x1080 அளவை உச்சமாக கொள்ளலாம். அகல திரையாக அதாவது wide screen-னாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3.போர்ட்டுகள்:
ஒன்றுக்கும் மேல் HDMI போர்ட்கள் இருப்பது மிகவும் நல்லது.ஒரு வேளை உங்கள் கணிணி கொஞ்சம் பழையதுவெனில் VGA போர்ட்டை பயன் படுத்துவீர்கள்.

4.ஸ்பீக்கர் மற்றும் டிவி டியூனர்:
பெரும்பாலான மானிட்டர்கள் தன்னுடன் ஸ்பீக்கருடன் வருவதில்லை. சில மானிட்டர்கள் ஸ்பீக்கர்களை இணைக்க வழி கொண்டிருக்கும். அப்படியெனில் ஒலியையும் ஒளியையும் ஒரே வயரில் கடத்தும் HDMI போர்ட் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் மானிட்டரை டிவியாகவும் பயன்படுத்த யோசனை இருந்தால் டிவி டியூனர் உள்ள மானிட்டராக வாங்கவும். கொஞ்சம் விலை அதிகமாயிருக்கும்.

5.இன்னும் பிற:

மானிட்டரின் ஸ்டைல், எடை மற்றும் கனத்தை கூட சிலர் கருத்தில் கொள்ளவேண்டி வரும்.கேமிங்குக்காக நீங்கள் இந்த மானிட்டரை பயன்படுத்துவதாக இருந்தால் Response Time 2ms ஆக இருப்பது நல்லது. மானிட்டரின் ஸ்டாண்ட் மற்றும் அதை திருப்பும், உயர்த்தும் வசதிகளும் உங்களுக்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவது நல்லது.

பிகு:
LCD திரைகளின் Stuck மற்றும் Dead pixels-களையும் பிளாஸ்மா திரையின் screen burn-in-களையும் JScreenFix தீர்ப்பதாக கேள்வி. தேவைப்படுவோர் முயன்று பார்க்கலாம்.

மாங்கல்ய தத்துவம்:
திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு அணிவிக்கப்படும் திருமாங்கல்யம் ஒன்பது இழைகளால் ஆனது. இதன் இழைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் உள்ளது. 1.வாழ்க்கையை புரிந்துகொள் 2.வாழ்க்கையில் மேன்மை 3.ஆற்றல் 4.தூய்மை 5.தெய்வ பக்தி 6.உத்தம நிலை 7.விவேகம் 8.தன்னடக்கம் 9.தொண்டு செய்தல்


Email PostDownload this post as PDF

Thursday, February 03, 2011

என்ன பயன்?

புக் ரீடர் ஒன்று வாங்குவதிலேயே குறியாய் இருக்கின்றான் கோபால். அமேசானின் கிண்டில் (Kindle), பார்ன்ஸ் அண்ட் நோபிள்சின் நூக் (Nook) மற்றும் கோபோ,பாண் டிஜிட்டல்,வெலோசிட்டி, சோனி ஈரீடர் அப்படி இப்படியென நூறு டாலரிலிருந்தே தெரிவுகள் இருக்கின்றன. எது வாங்கினாலும் தமிழ் மென்புத்தகங்களை இப்போதைக்கு epub வடிவில் படிக்க முடியாது. அந்த பார்மேட்டில் அவை கிடைக்கின்றதில்லை. தடவி பக்கங்களை புரட்டும் எக்ஸ்பீரியன்சைத் தவிர வேறெந்த விசேசமும் அந்த பார்மேட்டில் சாமானியர்களுக்கு தெரிவதில்லை.ஆங்கில pdf-களை எளிதாக epub-க்கு மாற்ற calibre உதவினாலும் தமிழ் எழுத்துருக்களை அது புரிந்துகொள்ள இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம். பெரும்பாலும் எல்லா ஈபுக் ரீடர்களும் (Ereader) தமிழ் pdf-களை எந்தவித தொல்லையும் இன்றி படிக்க உதவுகின்றன. கிண்டில், ஐபேட், நூக் தமிழர்களும் இன்ன பிற அண்ட்ராய்ட் தமிழர்களும் கொஞ்ச நாளைக்கு pdf-பிலேயே காலத்தை ஓட்ட வேண்டும்.

சங்கப்பலகை என்றொரு அட்டகாசமான சேவை.ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள்.தமிழ் வாசிப்பாளர்களுக்கு நல்ல பயன்பாடு. குறிப்பாக உலகமெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மாதிரி. ஆயிரக்கணக்கான உங்கள் விருப்பப் புத்தகங்களை கணிணியில் படிக்கலாம். பிடித்தவர்களின் புத்தகங்களை சகாயமான விலையில் வாங்கி உடனடியாக படிக்கத் தொடங்கிவிடலாம். இப்போதைக்கு கணிணி மூலமாக மட்டுமே படிக்க முடிகின்றது. ஐபேடுக்கும் அண்ட்ராயிடுக்கும் எம்.ஏ.பார்த்தசாரதி அவர்கள் ஒரு வழி கொண்டுவந்தால் இன்னும் நன்றாயிருக்கும்.Sangapalagai Reader ( SP Reader) எனும் மென்பொருளை இறக்கம் செய்து நிறுவி அவர்கள் கொடுக்கும் இலவச மாதிரி புத்தகங்களை வாசித்துப் பாருங்கள். நீங்களே உங்களுக்கு பொருந்துமாவென தீர்மானிக்கலாம். மேலே ஈபுக் ரீடர்களைப் பற்றி பேசியதால் இதையும் சொல்ல வேண்டி வந்தது.

ள்ளங்கையில் உலகம் எனச் சொல்லி கையில் செல்போனைக் கொடுத்து ஏமாற்றி இருக்கின்றார்கள். தெருவில் கலகம் வந்ததும் எல்லாம் செத்துப் போகின்றது. ஆளும்வர்க்கத்தின் அதிகாரம் அப்படி சார். ஈரான், டுனீசியா, எகிப்து வரிசையில் கில்லர் ஸ்விட்ச் கேட்கும் அங்கிள் சாமும் இதில் சேரும். தொழில்நுட்ப மேம்பாடுகளெல்லாம் மெல்லிய இழை போன்றது,நிஜத்தில் தேவைப்படும் போது அற்றுப்போகின்றது. வருங்கால சர்வாதிகாரிகளுக்கு இது ரொம்பவே வசதி.எதற்கும் பரணில் பேக்கப்புக்காக எவரெடி பேட்டரிகளும் ரேடியோவும் வைத்திருப்பது நல்லது.

மெரிக்காவில் அவுட்சோர்சிங் எந்த அளவிற்கு போயிருக்கின்றதுவென காண்பிக்க லைட்டர் சைடாக இங்கே ஒரு காமிக்.


மிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கொன்றாடும் செய்தியை கூறி 'இந்தியா வல்லரசாகப்போகிறது. உலக அரங்கில் முதலிடம் பெறப்​போகிறது...’ என்று தினமும் வாய் கிழியப் பேசுகிறோம். ஆனால், ஒரு சுண்டைக்காய் நாடு செய்யும் அட்டூழியத்தைக்கூட தட்டிக்கேட்டு, தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த லட்சணத்தில் சீனாவை விஞ்சுவோம், அமெரிக்காவைத் தாண்டிச் செல்வோம் என்று சொல்வதெல்லாம் எத்தனை வெட்கக்​கேடு. நித்தமும் அப்பாவிகளை அந்நிய நாட்டுக்குப் பலி கொடுத்து, வல்லரசாக மாறி என்ன பயன்?" எனக் கேட்டு டி.ஜெய்சிங் விகடனில் எழுதியிருந்தது நான் கேட்க நினைத்ததை அப்படியே சொன்னது போல இருந்தது.

சுதாராஜ் ”இளமைக் கோலங்கள்” SudhaRaj Ilamai Kolangal Tamil Novel pdf


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்