உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, October 30, 2008

இன்னொரு சுனாமி?

நண்பர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நமது விவாதகளத்தில் குறிப்பிட்ட செய்தி ஒன்று அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்பதால் இங்கு அதை பதிவாக பதிவு செய்கின்றேன். நன்றி முஹம்மது இஸ்மாயீல். ஹ.

மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு October 13, 2008

மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால் எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்றன. கடலுக்கடியில் பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.

1. http://www.paristamil.com/tamilnews/?p=15315

2. http://www.tamilnews.dk/article/SpecialNews/6722/

3. http://www.ajeevan.ch/content/view/6565/11/

30 Oct 2008
03:33 PM IST

மேல் கண்ட செய்தியை தற்போது தான் பார்க்க முடிந்தது.இதனை சாதரணமாக விட்டு விட முடியாது.மேலும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும். ஏனெனில் ஆற்றிவு உள்ள மனிதர்களை விட ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் நிலநடுக்கத்தையும் அதற்கு பின் வரும் சுனாமியையும் முன்னறியும் ஆற்றல் உண்டு.காரணம் மனிதர்களால் 20Hz to 20KHz வரையிலான அதிர்வுகளை மட்டுமே உணர முடியும். ஆனால் மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. இதற்கு கடந்த 2004-ல் ஏற்ப்பட்ட சுனாமியின் போது விலங்குகளின் செயல்பாடுகளே சிறந்த ஆதாரம். அமேரிக்காவில் இதன் அடிப்படையில் அமைந்த http://www.petquake.org என்ற இணையதளமே உண்டு. மேலும் தற்பொழுது (28 Oct 2008 to 29 Oct 2008) வரை பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் இந்தியதட்டு ஈரேசிய தட்டுடன் மோதி்யதால் ஏற்ப்பட்டதாகும். ஆகவே இந்த இடைவெளியை சரிப்படுத்த இந்திய தட்டுடன் பர்மிய தட்டே அல்லது ஆஸ்திரேலிய தட்டு மோதும் அபாயம் உள்ளது. அதனால் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் பெரும் பூகம்பம் ஏற்ப்பட்டு மற்றொரு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

இந்தியதட்டைப்பற்றிய விக்கிபீடியாவின் பக்கம்.

http://en.wikipedia.org/wiki/Indian_Plate

என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். நீங்கள் சுனாமி தாக்க்கூடிய வாய்ப்புள்ள கடற்கரை அருகே வசித்து வந்தால் உங்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்ணை (Number) என்னுடைய +919442093300 என்ற புதிய செல்லிட பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக (SMS) அனுப்பி வைத்தால் உங்களின் எண்ணை எங்களின் "ஒருங்கிணைக்கப்பட்ட ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" யின் (http://www.ina.in/itws/) தகவல் தளத்தில் இணைத்து விடுவேன். அதன் பிறகு "இறைவன் நாடினால்" உங்களின் செல்லிட பேசிக்கு சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை குறுந்தகவலாக வந்து சேரும்.பூகம்பங்களை இன்று வரை முன்னறிய எந்த தொழில்நுட்பமும் கிடையாது. ஆனால் ஆழிப்பேரலையை தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் முன்னறிய இயலும். இது அனைத்து படைப்பினங்களையும் இயற்கை பேரழி்வில் இருந்து காக்க எங்களால் முடிந்த 100% இலவச சேவையாகும்.ஏனெனில் எங்களைப் பொருத்தவரை சில நானொகிராம் எடை கொண்ட அமீபாவாகட்டும் அல்லது பல டன் எடை கொண்ட நீலத்திமிங்கலமாகட்டும் இரண்டுமே ஒன்றுதான். இவை இரண்டிற்க்கும் அந்த "உயிர்" என்னும் விஷயம் போய் விட்டால் அதன் இயக்கம் நின்று போய் செத்து மிதந்து விடும். இதில் மனிதன் என்ற உயிரினமும் அடங்கும். என்ன சொல்வது சரிதானே?

உங்களின் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதென்ன "இறைவன் நாடினால்" ? இதற்கான விளக்கம் இதே,பெரும் பூ்கம்பங்களின் பொழுது கடலடியில் மனிதர்களால் போடப்பட்டிருக்கும் ஒளிவடக்கம்பிகள் (Fiber Optic Cable) பூமித்தட்டுகளின் நகர்வால்அறுந்து போக வாய்ப்புகள் மிக அதிகம். ஏற்கனவே பல முறை இது போல நடந்துள்ளது.உலகின் பெருமளவு தகவல் தொடர்பு இந்த ஒளிவடக்கம்பிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றது. மேலும் ஒளிவடக்கம்பிகள் அறுபட்ட அச்சமயத்தில் தகவல்கள் (Datas) அனைத்தும் செயற்கைகோள்களின் வாயிலாகவே அல்லது மற்ற அறுபடாத ஒளிவடக்கம்பிகளின் வளைய இணைப்பின் (OFC Ring Network) மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.இதனால் அச்சமயத்தில் பிணையத்தில் பெருமளவு தகவல் நெரிசல் (Network Congestion) ஏற்ப்பட்டு அனுப்பட வேண்டிய தகவல்கள் சேருமிடத்திற்க்கு கால தாமதமாக (Network Delay and Packet Latency) வந்து சேரும் அபாயம் உண்டு. மேலும் அந்நேரத்தில் சூரியனால் மின்காந்தப்புயல் ஏற்ப்பட்டால் (Solar Flare) செயற்கைகோள்களின் வாயிலாக நடைபெறும் தகவல் பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்படும்.எங்களது சேவைக்கான கணணிகள் உலகின் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தாலும் சரியான நேரத்தில் குறுந்தகவல் வந்து சேரும் என்பதற்க்கு எந்த ஒரு உறுதியும் தரவியலாது. அதனால் தான் உங்களிடம் அப்படி கூறினேன்.இதைத்தான் விஞ்ஞானத்தில் நிச்சயமற்றதன்மை (Uncertainty) எனக்கூறுவார்கள். ஆதலால் இதன் பொறுப்பினை அந்த ஆதி இறையிடமே ஒப்படைத்து விட்டோம். வேறன்ன செய்ய ?

சுருங்க கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள, மனித இனம் State of Art - Cutting Edge Technology என்று பீற்றி கொள்ளும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இயற்கையின் சக்திக்கு முன்னால் State of Worst - Rusted Edge Technology தான். இதுதான் நிதர்சனமான உண்மையுங்கூட. இந்த விஷயத்தில் உலக வல்லரசு ஆகட்டும் அல்லது வல்லூறு அரசு ஆகட்டும். அனைவரின் நிலையும் ஒன்றுதான். நாம் யாரையும் குறை கூறவியலாது. அந்த ஆதி இறை எதை நிர்ணயம் செய்த்தோ அது நடந்தே தீரும். ஆகவே நாங்கள் உங்களைனைவரையும் வேண்டிக்கொள்வது ஒரெ விஷயம்தான். நீங்கள் எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாகவே அல்லது அந்த ஆதி இறையே இல்லை எனக் கூறுபவர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் சில நொடிகள் உங்களின் தூய ஆழ்மனத்தினால் எங்களின் இந்த சிறிய முயற்சி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது வாழ்த்துங்கள்.அது போதும் எங்களுக்கு.தனி மனிதனின் பிரார்த்தனையின் அதிர்வை விட அனைவரின் பிரார்த்தனைக்கான அதிர்வனாது மிக அதிகம். இப்பிரபஞ்சத்தில் ஒளியை (Light) விட வேகமானது மனதின் வேகம்.அதன் ஆற்றலும் அபாரமானது. இது நாங்கள் கண்டுணர்ந்த உண்மை.

இதற்கென ஹிந்து கோவிலிலே, யூத ஸவுலிலே, புத்த விகாரையிலே, கிறிஸ்த்தவ சர்ச்சிலே, இஸ்லாமிய மசூதிக்குள் அல்லது சீக்கிய குருத்துவாராவிலே சிறப்பு பிரார்த்தனைகள் தேவையில்லை.அது தேவையற்றதும் கூட. எங்களுக்கு இந்த கடவுள் & கோ மீது சிறு பயமுண்டு. ஏதாவது சிறு காரணத்தை காட்டி இந்த கடவுள் & கோ மக்களிடையே பெரும் பிளவை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். மேலும் இப்பிரபஞ்சத்தை அளவிடும் போது நம் பூமியானது மிகச்சிறிய மண்ணுருண்டை தான். அந்த மண் உருண்டையின் ஏதோவொரு சிறு பகுதியில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தி வசிக்கின்றது என்பது அசாத்தியமானது.ஆகவேதான் நாங்கள் மறுபடியும் உங்களின் ஆழ்மனத்திலிருந்து அந்த ஆழ்மனத்தில் வசிக்கும் மனசாட்சி வழியாக பிரார்த்திக்க வேண்டுகிறாம். இதைவிட சிறப்பான கருவி இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தியிடம் தொடர்பு கொள்வதற்க்கு இப்பிரபஞ்சத்தில் வேறொங்கும் இல்லை. அந்த யோகனா (யூனுஸ் நபி) சமூகத்தை போல, தற்போதைய சமூகமும் பேரழிவில் இருந்து தப்புமா என்று பார்ப்போம். இதற்க்கு காலம் தான் சரியான பதில் தரும்.

இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்திற்க்காக
(Indian Techies Zone)

முஹம்மது இஸ்மாயீல். ஹ,
Muhammad Ismail .H, PHD,
+919442093300




வெண்ணெயை உருக்கும்
அதே கதிரவன் தான்
களிமண்ணை இறுக்கவும் செய்கின்றது.

மரணத்துள் வாழ்வோம் ஈழத்துக் கவிதைகள் தொகுப்பு இங்கே தமிழில் மென் புத்தகமாக. Maranathul Vaalvom Kavithaikal Poems collection in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, October 29, 2008

நான் மட்டும் ஏன்?

ஆணி அடித்தார் போல நெஞ்சத்தில் பதிந்துபோன பல குட்டிகதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். புரியாத பல கருகலான விஷயங்களை எளிதில் அவை நமக்கு புரியவைத்துவிடும். குழப்பமான நேரங்களில் அவை நம் நினைவுக்கு வந்து ஆறுதல் தரும். ஒரு விதமான சாந்தியை கொடுக்கும். ஆனால் இன்றைக்கு எழுதப்படும் ”குட்டிக்” கதைகளோ விஷத்தை வீதிகளில் தெளித்துக் கொண்டிருப்பது சோகத்திலும் சோகம்.

துறவி ஒருவர் நதியினிலே நீராடிக் கொண்டிருந்தாராம். அவரின் சீடர்கள் நதிக்கரையிலே அமர்ந்திருந்தனர். ஆற்று நீரிலே தவறி விழுந்த தேளொன்று தண்ணீரிலே தத்தளித்துக் கொண்டிருப்பதை அத்துறவி பார்த்துவிட்டார். தன் கைகளினாலே அத்தேளை தூக்கி தரையினிலே விட எத்தனித்தார். அவ்வளவுதான் மறுவினாடியே அத்தேள் அவர் கையிலே கொட்டியது. வலியினால் கையை உதறிய துறவியின் கையிலிருந்து தேள் மீண்டும் தண்ணீரிலே விழுந்தது. வினாடிகூட தாமதிக்காமல் மீண்டும் அத்துறவி தன் கைகளினால் அத்தேளை தூக்கி காப்பாற்ற முயலுகின்றார். ஆனால் மறுகணம் மீண்டும் அத்தேள் துறவியின் கரத்தை கொட்டுகிறது. இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடர்கள் "அதை விட்டுத்தள்ளுங்கள் குருவே! நீங்கள் அதற்கு நன்மை செய்ய விழைய விழைய ஆனால் அது உங்களுக்கு தீமையல்லவோ செய்கின்றது" என கேட்கின்றனர். ஆனால் அத்துறவியோ விடுவதாய் இல்லை."நல்லது செய்வது என் சுவாபம் என்றால் கொட்டுவது அதன் சுபாவம்.அது தன் குணத்தை மாற்றாத போது நான் மட்டும் ஏன் என் குணத்தை மாற்றவேண்டும்" என கேட்டாராம்.

ஒருவேளை நீங்கள் ஆயிரம் முறை கேட்ட கதையாக இக்குட்டிக்கதை இருக்கலாம். ஆனாலும் அவ்வப்போது எனக்கு புத்துணர்வு தரும் கதைகளில் இதுவும் ஒன்று.




அன்பாயிருங்க,
அதுக்குனு அடிமையாயிடாதீங்க
இரக்கம் காட்டுங்க,
பாத்து ஏமாந்திடாதீங்க.

ஸ்ரீமத் பகவத்கீதை கடமைமூலம் கடவுள் பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையுடன் சுவாமி ஆசுதோஷானந்தர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Srimath Bhagavathgita Swami Aasuthosaananthar Sri Ramakrishna Madam in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, October 27, 2008

யூடியூப் வீடியோ வழங்கிய திருப்பம்

புத்திசாலித்தனமான கிளவர் ஐடியா எதாவது உங்களிடம் இருக்கின்றதா? எதாவது டிப்ஸ் அல்லது மைண்ட்புளோயிங் டிரிக்ஸ் உங்களிடம் இருக்கின்றதா? உடனே அதை வீடியோவாக்கி யூடியூபில் போஸ்ட் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையே மாறிப்போகலாம்.

இப்படித்தான் ஜானி எனும் 28 வயது இளைஞன் Wii remote controller-ஐயும் head tracking glass-களையும் வைத்து எப்படி மிக எளிதாக விர்சுவல் ரியாலிட்டி செய்வது என செய்து காட்டி அதை 5 நிமிட வீடியோவாக்கி யூடியூபில் போட்டான். இன்றைக்கு அவ்வீடியோ 6 மில்லியன் தடவை பார்க்கப்பட்டிருக்கின்றது. இது போல இவனுடைய இன்னும் சில இன்னோவேடிவ் ஐடியாக்களையும் வீடியோவாக்கி யூடியூபில் போட்டான். இவன் கண்டுபிடிப்புகளை கண்டு ஆச்சரியத்தில் வியந்த பெரிய பெரிய வீடியோ கேம் நிறுவனங்களெல்லாம் இவனை மொய்த்தன. சீக்கிரத்தில் இவனைப்பற்றிய பேச்சு மைக்ரோசாப்டிலும் அடிபட ஆரம்பித்தது. ஜானியை மைக்ரோசாப்டில் வேலைக்கு இழுக்க பில்கேட்சை அணுகியபோது அவருக்கு ஏற்கனவே இவனை பற்றி தெரிந்திருந்ததாம். அவருக்கும் ஜானியை வேலைக்கு எடுப்பதில் ரொம்ப சந்தோசம். இப்போது ஜானி Microsoft - Applied Sciences துறையில் ஒரு Researcher. ஐந்து நிமிட யூடியூப் வீடியோ இவன் வாழ்க்கையையே மாற்றிப்போட்டுவிட்டது.

ஒருவேளை இவன் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தால் அதை ஒரு சில பேர் மட்டுமே படித்திருப்பர். ஒரு தொழில்நுட்ப அரங்கில் பேசியிருந்தால் மேலும் சில நூறு பேர் மட்டுமே கேட்டிருப்பர். ஆனால் இவன் குரல் மைரோசாப்ட் வரை எட்ட யூடியூப் ஒரு ஊடகமாக அமைந்தது. மாபெரும் கூட்டத்தையும் எளிதில் எட்ட இன்றைக்கு இருக்கும் வசதிகள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே. லாவகமாய் பயன்படுத்துவோர் வெற்றி பெறுகின்றனர். வெட்டிவேலைகளில் புகுவோர் சிக்கலில் வீழ்கின்றனர்.










நீ திருந்து..
நாடே திருந்தும்...

ரமணிச்சந்திரன் நாவல் "இடைவெளி அதிகமில்லை" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ramanichandran Idaiveli Athigamillai Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, October 24, 2008

கிபி 0001-ல் இந்தியா

புள்ளிவிவரங்களுக்கேற்ப உலக நாடுகளின் வரைபடத்தை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் வெவ்வேறு அளவுகளில் வரைந்து பல விஷயங்களை நமக்கு எளிதாக புரியவைப்பதில் கில்லாடிகள் Worldmapper.org காரர்கள். அவர்கள் வரைந்திட்டுள்ள உலகவரைபடங்கள் பல கதைகளை சொல்லும்.

கீழே நீங்கள் காண்பது கிபி 1-ல் உலகின் ஐஸ்வர்யம் பொருந்திய நாடுகளின் மேப். இந்தியா என்னமாய் பெருத்திருந்திருக்கின்றதென பாருங்கள்.

அப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழிந்திருக்கின்றது. செல்வச்செழிப்பில் இருந்திருக்கின்றோம். விலைமதிக்க இயலாத பொக்கிஷங்கள் இங்கிருந்தன. கோவில்களிலும் அரண்மனைகளிலும் இருந்த வேலைப்பாடுகளுக்கு விலை குறிக்க முடியாது. மயிலாசனம் முதல் கோகினூர் வைரம் வரை இங்கிருந்தன. வாசனை திரவியங்கள், யானை தந்தங்கள், பூம்பருத்தி ஆடைகள் இவற்றுடன் மயிலும் மிளகும் ஏற்றுமதி ஆயின. அவற்றிற்கு பதிலாக பொன்னும் மணியும் வந்து குவிந்தன. திரைகடல் ஓடியும் திரவியம் தேடினர். பலதுறைகளிலும் வல்லுனர்கள் இருந்தார்கள். இப்படி ”கிபி ஒன்றில்” இந்தியா பெருத்திருந்தது. அடுத்து நம்மை நெருங்கி வந்தது சீனா மட்டுமே. அமெரிக்காவும் ஐரோப்பாவும் அப்போது ஒல்லிப்பிச்சான்களாய் இருந்தன.

1835-ல் பாரதபூமியை சுற்றி பார்த்த ஒரு பிரிட்டீஷ்காரரின் வாக்குமூலத்தை பாருங்கள்.

இந்த நிலை கிபி 1500 வரை நீடித்தது.

அப்புறம் வந்த எந்திர தொழில்புரட்சி மேற்கை பருமனாக்கியது என்கின்றார்கள்.

1900-ல் உலகம் செல்வச்செழிப்பின்படி.


ஆப்ரிக்க நாடுகள் இன்னும் தேய்ந்து கழுதை கட்டெறும்பாகிக்கொண்டிருக்க 2015-ல் சீனா வீங்கி விட்டதையெல்லாம் மீட்டெடுக்கும் என ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

2015-ல் உலகம் செல்வச்செழிப்பின்படி.




”நாம் இந்தியாவுக்கு மிகவும்
கடன் பட்டுள்ளோம்.
எண்களைக் கொண்டு
எண்ணச் சொல்லிக்
கொடுத்தவர்கள் அவர்கள்தாம்.
அது இன்றி நாம்
மிகப்பெரிய அறிவியல்
கண்டுபிடிப்புகளையெல்லாம்
கண்டுபிடித்திருக்க இயலாது”
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் கடல்கன்னி ராணி காமிக்ஸ் படக்கதை இங்கே தமிழில் மென் புத்தகமாக. James Bond Kadalkanni Rani Comics in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, October 15, 2008

மடிக்கணிணி கூடுதல்கள்

அடுத்தமுறை புதிதாக மடிக்கணிணி வாங்கப்போகும் போது அதில் நான் இருக்க விரும்பும் சில கூடுதல் வசதிகளை இங்கே வரிசையிட்டு பார்த்தேன். சொல்லப்போனால் நான் விரும்பும் வசதிகளெல்லாம் இருக்குமாறு ஒரு ”முழு மடிக்கணிணி” கிடைப்பது என்பது மிகவும் கடினம். இரண்டாவது அதற்கான பட்ஜெட் எட்டி உதைக்கும். அத்யாவசிய பொருட்களை வாங்கவே கூப்பன்களையும் சேல் போட்டிருக்கும் மால்களையும் மக்கள்தேடும் காலத்தில் என் கூடுதல்கள் கொஞ்சம் கூடுதல் தான்.

இதோ நான் விரும்பும் மடிக்கணிணி கூடுதல்கள்

  • மடிக்கணிணியை பூட்டிங் செய்யாமலேயே அதாவது விண்டோசினுள் நுழையாமலேயே உடனடி VCD, DVD, ACD-யை ஓடவிடும் வசதியுடன் அது வர வேண்டும். Dell இதை MediaDirect என்கின்றது. HP இதை Quickplay என்கின்றது.அதற்கான Play பொத்தான்கள் கீபோர்டிலேயே இருக்கும்.
  • சோனி மடிக்கணிணிகள் ”Hard Disk Drive Recovery" எனப்படும் ஒரு Hidden Partition-னோடு வருகின்றன.விண்டோஸ் கிராஷ் ஆனால் எளிதாக ஒரு கீயை தட்டினால் போதும். நொடியில் மீண்டும் விண்டோஸ் புதிதாக அதிலிருந்து நிறுவப்படும்.
  • Lightscribe வசதியோடு உங்கள் மடிக்கணிணி வந்தால் கொண்டாட்டம் தான். VCD DVD எரிக்கும் போது அது அப்படியே அந்த தட்டுகளின் மேல் அழகாக லேபிளையும் எழுதிவிடும்.அப்படியே அது blu-ray வசதியும் கொண்டிருந்தால் சந்தோசம்.
  • ஒரு ஹார்ட்டிரைவை கழற்றி போட்டுவிட்டு சட்டென இன்னொரு ஹார்டிரைவை மாட்டும் வசதி உங்கள் மடிக்கணினியில் வேண்டுமா? Swappable Drive Bay உள்ள மடிக்கணிணி பார்த்து வாங்குங்கள்.IBM Lenovo-வில் பார்த்த ஞாபகம்.
  • படத்தில் நீங்கள் காணும் புதிய வகையான DVI வீடியோ போர்ட்டுகள் தட்டை மானிட்டருக்கேற்ற உச்ச தர டிஜிட்டல் வீடியோவை கொடுக்கின்றதாம்.
  • HDMI போர்ட்டும் HDTV-யும் இருந்தால் வீட்டில் ஜாலிதான். மடிக்கணிணியில் ஓடும் வீடியோவை உச்ச தரத்தில் ஆடியோவோடு உங்கள் டிவியில் கண்டுகளிக்கலாம்.
  • Biometric Fingerprint Reader இருந்தால் உங்கள் விரலை அடையாளம் கண்டு அது உங்களை மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கும் .அப்படியே முகத்தையும் அடையாளம் காண Face Recognition கேமராவும் இருத்தல் நல்லது.
  • நெட்வொர்க் கார்டு, வயர்லெஸ் (வை-ஃபை) வசதியோடு Bluetooth-ம் அவசியம் இருப்பது நல்லது.
  • அவ்வளவு அவசியமில்லை என்றாலும் இன்ஃப்ராரெட் தகவல் தொடர்புக்கு CIR port உதவலாம். (பழைய IrDA -ன் வாரிசு).
  • மற்றபடி அவசரத்துக்கு Cellular Modem அல்லது TV Tuner போன்றன செருகிக் கொள்ள ExpressCard 54 slot கண்டிப்பாக இருத்தல்வேண்டும். (பழைய PCMCIA -ன் வாரிசு)
  • FM கேட்டுக்கொண்டே "இலக்கியம்" எழுத Built-in FM Tuner இருந்தால் நன்னா இருக்கும்.
  • 8 in 1 Memory card reader (SD/MS/MMC/XD) இருந்தால் எல்லாவகை கேமரா மற்றும் செல்போன் மெமரிகார்டுகளையெல்லாம் எளிதாய் செருகி பயன்படுத்தலாம்.
  • சில வகையான கேமராக்கள் மற்றும் ஸ்கேனர்களை செருக IEEE 1394 அல்லது Firewire போர்ட் இருக்கவேண்டும்.
  • USB போர்ட் eSATA/USB combo port ஆகவும் வெர்சன் 2.0 ஆகவும் இருத்தல் நல்லது. அப்படியே அவை Sleep-and-Charge USB போர்ட்டாக இருந்தால் மடிக்கணிணி ”OFF" ஆக இருக்கும் போது கூட USB போர்ட் வழி என் ஐபோனையும் ஐபாடையும் சார்ஜ் செய்ய இயலும்.Toshiba-வில் பார்த்த நியாபகம்.

பாருங்கள்.மனுஷனுக்கு எத்தனை ஆசைகள்.



ஆசையில்லாத முயற்சியால்
பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

11ம் வகுப்பு "கதை கோவை" சிறுகதைகள் தொகுப்பு இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. 11th Kathai Kovai Short Stories in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, October 14, 2008

நுண்கடன் மற்றும் கர்மா

2006-ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வங்காளதேசத்தை சேர்ந்த பெரியவர் முகம்மது யூனுஸ் அவர்களுக்கு கிடைத்தது. அப்போதுதான் ”மைக்ரோ கிரெடிட்” பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. தேவையிலிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழைமக்களுக்கு சிறுகடன் வழங்கி அவர்களை ஏதாவது ஒரு தொழில் செய்ய ஊக்குவித்து அதன்மூலமாக வளர்ந்து வரும் பல நாடுகளில் பெரிய அமைதிப் புரட்சியே செய்து கொண்டிருக்கின்றார் இம்மனிதர்.

25 டாலர் கொண்டு நாம் என்னத்தை சாதித்து விடப்போகின்றோம் என யோசித்துக் கொண்டிருக்கையில் அதே 25 டாலரை எதாவது ஒரு கால்நடையிலோ அல்லது கைத்தொழிலோ முதலாக்கி உங்கள் இந்த சிறு உதவியினால் தங்கள் வாழ்க்கையை ஓட்ட இங்கு கோடிக்கணக்கில் மக்களிருக்கின்றார்கள்.

இந்த மைக்ரோஃபைனான்சிங் மூலம் உலகின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் ஒரு ஏழைக்கு 25 டாலர் வழங்குகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அவன் அதனைக் கொண்டு ஒரு சிறு தொழில் செய்து தன் பிழைப்பை ஓட்டுகின்றான். ஆறுமாதம் கழித்தோ அல்லது ஒரு வருடம் கழித்தோ அப்பணம் அப்படியே உங்களிடம் திரும்பிவந்து விடும். கர்மாவில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அதுவும் அதனோடு சேர்ந்து வரும்.

இப்படி சிறு சிறு கடனுதவிகளை மைக்ரோகிரெடிட்களாக ஆங்காங்கே தவிக்கும் பல நெஞ்சங்களுக்கு கொடுத்து உதவ ஆன்லைனிலேயே வழியிருக்கின்றது.
http://www.kiva.org

இங்கு நீங்களே யாருக்கு நிதி உதவப்போகின்றீர்கள் என ஒவ்வொருவரின் ப்ரொபைலையும் படித்து ஒரு முடிவுக்கு வரலாம். ஒருவேளை உங்கள் தொழிலை அபிவிருத்தி செய்ய நீங்களே கூட கடன்கேட்க விரும்பினாலும் இங்கு உங்கள் திட்டங்களை விவரித்து நீங்களும் நுண்கடன் கேட்கலாம்.

மற்றபடி மார்வாடி கணக்காய் வட்டிக்கு கடன் கொடுக்க/வாங்க திட்டமிருந்தால் http://www.prosper.com -க்கு போங்கள். நியாபகமிருக்கட்டும், இரண்டிலுமே ரிஸ்க் இருக்கின்றது.


கர்மாவை விளக்கும்
ஒரு Gif அனிமேசன்
வி.இ.லெனின் எழுதிய கூட்டுறவு குறித்து இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Lenin`s "On Co-operation" in Tamil Kooturavu Kurithu pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, October 13, 2008

உண்மையான பணக்காரன்

அவன் பெயர் மணி. ஆனால் இவ்வூர்காரர்கள் உச்சரிப்பில் அவனை மாணி என்றாக்கி விட்டார்கள். 2001-ல் 400K விலை கொடுத்து நியூஜெர்சியில் ஒரு வீட்டை வாங்கினான். 2006-ல் அவன் தன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான்.600K வென சொல்லிப் போனார்கள். அதாவது 200K லாபம். மகிழ்ச்சியில் கொண்டாடினான். இஷ்டத்துக்கும் செலவு செய்தான். சேமிக்க ரொம்பவும் யோசித்தான். மீண்டும் இவ்வருடம் அவன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான். 375K என்றார்கள். மாணிக்கு மாரடைப்பே வந்துவிட்டது. இப்போது சொல்லுங்கள், அவனுக்கு 225K நஷ்டம் வர யார் காரணம்? அப்பணம் எங்கே போனது? யாராவது கொள்ளை கொண்டு போனார்களா? அல்லது அரபுநாட்டுக்குப்போனதா? இல்லையே. இப்படித்தான் பில்லியன்கணக்கில் டாலர்கள் வால்தெருவில் காற்றில் கரைந்து போயின. ஃபைனான்ஸ் வங்கிக்காரர்களால் சொல்லப்பட்டு வந்த பெரிய புள்ளிவிவர எண்களெல்லாம் வெறும் fake number-களாகிப்போயின.

இப்படி செயற்கையாய் போலி எண்களால் உருவான போலி பிரமாண்டம் இப்படி அநியாயத்துக்கும் விழுந்து நொறுங்கியது ஒரு வகையில் நல்லதே. தன்னைத்தானே சரிசெய்து கொள்ள பொருளாதாரம் என்ற அந்த அப்பாவி முயன்றது. ஆனாலும் அதை தன்னைத்தானே சரிசெய்ய விடாமல் அந்த போலி எண்களை காப்பாற்ற நிஜமாய் நோட்டுகள் அடித்து பணத்தின் மதிப்பை வெகுதாழ கொண்டு செல்லவிருக்கின்றார்கள். தற்காலிகமாய் சந்தையை காப்பாற்ற உலவ விடப்படும் பல நூறு பில்லியன் டாலர்கள் தீர்வானது கார் இஞ்சின் இரைச்சலை போக்க வானொலி சத்தத்தை அதிகப்படுத்துவது போன்றதாகும். நிஜ ஆரோக்கியத்தை அது தராது. எனினும் இன்னொரு கிரேட் டிப்ரசனை தவிர்க்க உலகநாடுகள் இதில் அபூர்வமாய் ஒருங்கிணைந்துள்ளன. உலக அளவில் ஒரு ரெசர்வ் பாங்கின் அவசியத்தையும் உலகளாவிய ஒரே கரன்சியின் அவசியத்தையும் இச்சிக்கல் நமக்கு வலியுறுத்தியுள்ளது.

இனி என்ன நடக்கும்.இன்று போல் தொடர்ந்து பங்குசந்தைகள் முன்னேறி நிலமை சரியானால் இன்னும் விலைவாசி இரண்டு மடங்கு ஏறும்.டாலர் அப்படியே கீழாக குட்டிகரணமடிக்க தங்கமும் பெட்ரோலும் விர்ரென மேலே ஏறத்தொடங்கும்.சந்தையில் புழக்கத்தில் விடப்பட்ட பணங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சாதாரண ஜனங்களை வந்து எட்டும்.வந்து நிறையவே வாட்டும்.அது அப்படியே போய்விட்டால் நல்லது.இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலேபோய் ஹைப்பர் இன்ஃபிளேசன், ஃபுட் ரையாட்ஸ், மார்சியல் லா, மில்லியன் பேர்களை அடைக்க வசதி கொண்ட ரகசிய அண்டர்கிரவுண்ட் ஜெயில்கள், கவர்ண்மென்ட் கிராஷ் அப்படி இப்படியென பல கதைகள் சொல்கின்றார்கள்.

இந்த விளையாட்டில் அணில் அம்பானி இழந்தது 30 பில்லியன் டாலர்களாக்கும். சம்பாதிப்பது மட்டுமல்ல சம்பாதித்ததை தக்கவைப்பததற்கும் ரொம்ப பிராயசப்படவேண்டியிருக்கின்றது. இப்போதெல்லாம் தினமும் நிம்மதியாய் உங்களால் தூங்கமுடிகிறதென்றால் நீங்கள் தான் உண்மையான பணக்காரர்.




வாழ்க்கை!!
ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்று இரண்டு நிஜங்களும்

உமா பாலகுமார் "தீண்டி சென்ற தென்றல்" நவீனம் இங்கே தமிழில் மென் புத்தகமாக.நன்றி Baluthemagician. Uma Balakumar Thendi Sendra Thendral Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, October 09, 2008

இரண்டாவது சூரியன்

நம்மிடையே அடிக்கடி வந்து விரிவான பின்னூட்டங்களையிட்டு பல நல்ல தகவல்களை சொல்லிச் செல்பவர் நண்பர் முகமது இஸ்மாயில். அவரது சமீபத்திய பின்னூட்டம் ஒன்று என்னை இப்பதிவை எழுதத் தூண்டியது. இஸ்லாமிய குரான் படி அல்லது கிறிஸ்தவர்களின் பைபிளின் படி முதல் ஹேக்கிங் வெற்றிகரமாக நடந்தது ஈடன் தோட்டத்திலாம். ஏவாள் எனப்பட்ட அந்த உலகின் முதல் பெண், தடைசெய்யப்பட்ட ஒரு பழத்தை சாப்பிட செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டாள். அதாவது அங்கு உலகின் முதல் சோசியல் இஞ்சினியரிங் ஹேக்கிங் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இது என்னை சக்கரியா சிட்சின்னிடம் (Zecharia Sitchin) கொண்டு சென்றது. அவரும் இதையேத் தான் சொல்கின்றார். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக. அந்த காலத்திய ஈராக் பகுதிகளில் கொலோச்சியிருந்த நாகரீகம் சுமேரிய நாகரீகம். இந்நாகரீகத்தின் மிச்சங்களிலிருந்து கிடைத்த சுருள்களை படித்து ஆராய்ந்த சக்கரியா சிட்சின் சொல்வது என்னவென்றால் குரங்குமுக சாயல்கொண்டிருந்த நம் முகம் திடீரென இன்றைக்கு நாமிருக்கும் மனித முக சாயலாக மாற வெளி கோளை சேர்ந்த ஒரு கும்பல் தான் காரணம் என்கின்றார். ஒவ்வொரு 3600 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நிபிரு(Nibiru) என்ப்படும் ஒரு கோள் நம்பூமியின் மிக அருகே வந்து செல்வதாகவும் அப்படி அக்காலத்தில் ஒரு முறை நம்பூமியருகே அக்கோள் வந்த போது அதிலிருந்து பூமிக்கு பறந்து வந்த அனுனாக்கி (Anunnaki) எனப்பட்ட அந்த கும்பல் அவர்கள் ஆதாயத்துக்காக நம் குரோமோசோம்களை சீண்டி அவர்கள் போலவே நம்மை மாற்றி அவர்களுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டு போய்விட்டார்கள் என்கிறதாம் அந்த பழங்கால சுருள்கள். பூமியில் கிடைக்கும் தங்கம் அவர்களின் விருப்ப பொருளெனவும் அதை தோண்ட நம் மக்களை வேலை வாங்கினார்கள் என்கின்றார் இந்த ஆய்வாளர். இந்த நேரத்தில் நம் இதிகாசங்களில் நாம் படிக்கும் விமானா, பறக்கும் ரதங்கள், வானிலிருந்து வந்த வானலோக தேவர்கள், விண்சேனைகள் கதைகள் நினைவுக்கு வந்துசெல்கின்றன.

விஞ்ஞானப்படி இப்படி ஒரு கோள் பூமியை நெருங்கும் போது பூமியின் ஈர்ப்பு விசைகளில் மிகுந்த மாற்றங்கள் ஏற்ப்படுவதால் பூமி மிகவும் அல்லகோலப்படும். அப்படித்தான் அந்த காலத்தில் டைனோசர்கள் அழிந்து போயின, ஐஸ்யுகம் மறைந்து போயின, அட்லாண்டிஸ், லெமூரியா போன்ற கண்டங்கள் திடுமென கடலுக்குள் மூழ்கின. கொழித்திருந்த நாகரீகங்கள் பல அழிவுக்கு வந்தன என தியரி பேசப்படுகின்றது.

1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக.அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட Eris என்ற கோள்தான் அது என்கின்றனர்.

ஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபிரு” தான் என்கின்றனர். அது இப்போது பூமியை மிகவும் நெருங்கி வந்துவிட்டதாகவும் தென் துருவ பகுதிகளில் இப்போதெல்லாம் வெறும் கண்ணுக்கும் தெரியும் அளவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கின்றார்கள். அடுத்த வருட மத்தியில் அது நம் எல்லாருடைய கண்களுக்கும் தெரியும் அளவுக்கு அருகே நெருங்கிவிடுமாம். 2012-ல் அது இன்னும் நம் பூமியை மிகவும் நெருங்கி அது அதன் பாதையில் கடந்து போகுமாம். அப்போது அது இரண்டாவது சூரியன் போல வானில் காட்சி அளிக்குமாம். உலக அளவில் இதுபதட்டத்தையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நாசாவும் அமெரிக்க அரசும் இத்தகவலை மறைத்து வருகின்றது என்கின்றனர் அக்கூட்டம். அதன் போக்கை கண்காணிக்கவே அவசரமாக கொண்டு உலகின் மிகப்பெரிய South Pole Telescope-ப்பை நாசா தென் துருவத்தில் கொண்டு நிறுவியுள்ளதாம்.

இன்றைக்கும் பூமியில் நிகழும் அநேக தட்பவெப்ப மாறுதல்களுக்கும், தட்டுகள் அனாயசமாய் உராய்ந்து உருவாகும் பூமிஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளுக்கும் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிபிரு தான் காரணம் அது இன்னும் நெருங்க நெருங்க அதன் தாக்கம் இன்னும் இன்னும் பூமியில் அதிகரிக்கும் என்பது அவர்கள் கருத்து. இன்னும் ஒரு சிலர் கொஞ்சம் அதிகமாய் போய் பூமியை நிபிரு அனுனாக்கிகள் கொள்ளை அடிப்பதால் பூமியிலிருந்து இலட்சக்கணக்கானோர் திடீரென காணாமல் போய்விடுவர் என்றும் அதனால் நிபிரு கும்பலுக்கும் பூமியின் மனிதர்களுக்கும் போர் நேரிடலாமென்றும் கதை விடுகின்றனர். எல்லாம் அடுத்த வருடம் மத்தியில் தெரிந்துவிடும்.

நாசா இந்த நிபிரு கதைகளையெல்லாம் சுத்தமாய் மறுக்கின்றது.
http://astrobiology.nasa.gov/ask-an-astrobiologist/question/?id=2759

இதற்கிடையே வரும் அக்டோபர் 17-ம் தியதி தொடர்ச்சியாக இந்தியாவில் 36 மணிநேரம் வெளிச்சமாகவும் அமெரிக்காவில் 36 மணிநேரம் இரவாகவும் இருக்கப்போகின்றதுவென சுட சுட SMS வழியும் ஈமெயில் வழியும் புரளி ஒன்று பரவிக்கொண்டிருக்கின்றது.

கதை என்னமோ சுவாரஸ்யமாய் தான் போய் கொண்டிருக்கின்றது.



என்றும் நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
-கார்ல் மார்க்ஸ்

ரமணி சந்திரன் "பாசமலர் தோட்டம்" புதினம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran "Paasamalar Thoattam" tamil novel in pdf format ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, October 08, 2008

வைரஸ் விரட்டு

வைரஸ்கள் நம்மைத்தேடி வருவதைவிட அவைகளை நாமாய்த்தேடிப் போய் வலிய இழுத்துவருவது தான் இன்றைய டிரண்ட். இரண்டு வாரத்துக்கொருமுறை தனது லேப்டாப்பை ஃபார்மேட் செய்ய கோபால் கொண்டுவருகின்றான். எல்லாம் வைரஸ் தொல்லை தான். அது என்ன வைரஸ் என கண்டுபிடித்து அதை நீக்கும் வழி கண்டுபிடித்து அதை நீக்கினாலும் ஏனோ மனது கேட்பதில்லை. ஏர்லைன்சில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதிலிருந்து ஈபேயில் நோக்கியா 6300க்கு Plantronics புளூடூத் ஹெட்செட் வாங்குவதுவரை எல்லாமே இந்த மடிக்கணிணி வழிதான். ஒரு முறை அட்டாக் ஆன கணிணியை முழுசாய் நம்பக்கூடாது என்பர் கணிணித்துறை பாதுகாப்பு வல்லுனர்கள். போகும் போது அது என்னவெல்லாம் விட்டுவிட்டுப் போனதோ என்ற சந்தேகம் தான். யாருக்குத் தெரியும்?

இணையம் வழி வரும் கணிணி வைரஸ்களிலிருந்து விலகியிருக்க நான் பின்பற்றும் சில வழிமுறைகளை இங்கே கொடுக்கின்றேன். எனக்கு இவை வொர்க் அவுட் ஆகின்றன. ஒருவேளை உங்களுக்கும் வொர்க் அவுட் ஆகலாம்.

1.விண்டோஸ் ஃபயர்வால் எப்போதும் “ON" அல்லது “Enable" நிலையிலேயே இருக்கட்டும்.இது ரொம்பவும் முக்கியம். இது தான் உங்கள் கணிணிக்குள் வேண்டா விருந்தினர்களை உள்ளே விடாமல் தடுத்துக்கொண்டிருப்பது.

2.ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்கிழமையும் மைக்ரோசாப்ட் வெளியிடும் ”தட்டல் ஒட்டல்”களை நாமும் உடனடியாக நிறுவிக்கொள்ளவேண்டும்.I mean Windows updates. http://www.update.microsoft.com

3.மைக்ரோசாப்டின் இலவச வெளியீடான Windows Defender-ஐ இறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம்.

4.கூகிள் வழங்கும் இலவச மென்பொதியான “Google Pack”-க்கோடு Norton Security Scan-ம் Spyware Doctor-ம் இலவசமாய் கிடைக்கின்றது. விட்டுவைப்பது ஏன். அதையும் தெரிவுசெய்து நிறுவி வைத்துக் கொள்ளுங்கள். http://pack.google.com

5.சில 4shared.com போன்ற கோப்புவழங்கிகள் அவைகளில் ஏற்றம்/இறக்கம் செய்யப்படும் கோப்புகளை வைரஸ் ஸ்கேன் செய்வதுண்டு. ஆனால் Rapidshare போன்ற பிரபல பல கோப்புவழங்கிகள் இவ்வாறு வைரஸ் ஸ்கேன் செய்வதில்லை. இதனால் இவற்றிலிருந்து இறக்கம் செய்யப்படும் கோப்புகள் உங்கள் கணிணிக்கு அபாயம் தரலாம்.

6.ஆடியோ வீடியோ போன்ற கோப்புகளை தைரியமாக இறக்கம் செய்து கொள்ளலாம்.ஆனால் exe கொண்ட பயன்பாட்டு கோப்புகளை இறக்கம் செய்து அப்படியே நம் கணிணியில் ஓடவிடுவது அவ்வளவு நல்லதல்ல. எல்லா பயன்பாட்டு மென்பொருள்களையும் நம்பத்தகுந்த தளங்களிலிருந்தே இறக்கம் செய்குதல் தகும்.

7.பெரும்பாலான கிராக் செய்யப்பட்ட மென்பொருள்கள் கூடவே இலவசமாக ஒரு வைரசோடுத்தான் வருகின்றவாம்.

8.சில தளங்கள் மின்னிமின்னி ரொம்ப அக்கரையாய் காட்டும் ”உங்கள் கணிணியின் பெர்பாமண்ஸ் சரியில்லை.அதை சரிசெய்யவா?” அல்லது ”உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளது.அதை சரி செய்யவா?” என கேட்பதெல்லாம் டூப்புகள். ஒரு போதும் இது போன்ற கேள்விகளுக்கு ”ஓக்கே” சொல்லக்கூடாது. ”கேன்சல்” செய்து விடவேண்டும்.

9.அது போலவே முகமறியாதளங்கள் கொடுக்கும் ActiveX control களையும் இறக்கம் செய்து நிறுவிவிடாதீர்கள். ரொம்ப ரொம்ப டேஞ்சர். அது என்னவென உங்களுக்கு தெரியாவிட்டால் எப்போதும் “Cancel"-ஐயே கிளிக்குங்கள். உண்மையிலேயே நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என தெரிந்து செய்தால் மட்டும் “OK" கிளிக்குங்கள்.

10.இது தவிர AVG, Avira, Avast போன்ற இலவச ஆண்டிவைரஸ்களில் ஏதாவது ஒன்றை இறக்கம் செய்து நிறுவிவைத்துக்கொண்டு அவற்றின் definition-களையும் அவ்வப்போது சமகாலத்திற்கு அப்டேட் செய்து கொண்டு வந்தால் பெரும்பாலான வைரஸ் தொல்லைகளை நாம் தடுக்கலாம்.




தோழர்களே!
பயணம் போவோம்!
நாட்களை நம்பியல்ல,
நம்மிரு தோள்களை நம்பி!

ஷோபா சக்தியின் "கொரில்லா" புதினம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. நன்றி வேதன். ShobaShakti Korilla Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, October 06, 2008

மணநாளுக்கென ஒரு தளம்

முன்பெல்லாம் நம் சொந்தக்காரர்களும் சொக்காரர்களும் ஒரே கிராமத்தில் இருப்பர். கலியாணம் போன்ற வைபவங்கள் ஒரு ஊர் திருவிழா போலிருக்கும். குழல் ஒலிப் பெருக்கியை உயரே ஏற்றிக் கட்டி ஊரையே அமர்க்களப் படுத்தி விடுவர். இன்றைக்கோ நிலைமை வேறு. உற்றார் உறவினர்கள் நண்பர்களெல்லாம் கண்காணா பிரதேசத்தில் சிதறிக்கிடக்க ஏதோ ஒரு அப்பாய்ண்மென்ட் எடுத்தது போல அந்த ஒரு நன்நாளில் மட்டும் வசதிப்படும் எல்லாரும் குழுமி மீண்டும் சிதறிவிடுகின்றோம். ஒட்டு உரசல் இல்லாத ஒரு எந்திரக் கூடுகை போலிருக்கும். அதுவாவது நடக்கிறதே என்று நாம் சந்தோசப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்.

நணபன் ஒருவன் தன் மணநாளுக்காக தயாராகிக்கொண்டிருக்கின்றான். தன்பெயரையும் மணப்பெண் பெயரையும் சேர்த்து ஒரு .com பதிவுசெய்து http://www.ewedding.com உதவியோடு அழகான ஒரு வெப்தளத்தை எளிதாக உருவாக்கி அதன் சுட்டியை எல்லாருக்கும் அனுப்பி வைத்து இருக்கின்றான். அதில் முக்கிய தகவல்களான திருமண தேதி, கோவில் பெயர், கோவிலுக்கு போகும் வழி, மண்டபம் பற்றிய தகவல்கள், பேருந்து வழித்தடங்கள் இன்ன பிறவற்றையும் அழகாக போட்டு வைத்திருக்கின்றான். சீக்கிரத்தில் திருமணம் செய்யப்போகும் நம் நண்பர்களுக்கும் இத்தளம் மிக உதவியாக இருக்கும். ரொம்ப மெனக்கெடத் தேவையில்லை. உங்கள் படங்களையும் ஆல்பமாக ஏற்றி குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளலாம். நண்பர்கள் கிறுக்க Guestbook வைத்துக்கொள்ளலாம். எங்கு தேனிலவு போகலாமென கேட்டு குட்டி ஓட்டுப்பெட்டி வைத்துக்கொள்ளலாம்.

RSVP-செய்ய கூட வசதி செய்துகொள்ளலாம்.அப்படீன்னா என்ன என்கின்றீர்களா? பிரெஞ்சில் "Répondez s'il vous plaît"என்பதின் சுருக்கம் தான் RSVP.அதாவது நீங்கள் இத்தனை பேரோடு வருகின்றேன் என முன்கூட்டியே கூறிவிட்டால் அதற்கேற்ப விழா நடத்துபவர்கள் சரியாக திட்டமிட்டுக்கொள்வார்கள். இங்கெல்லாம் RSVP ரொம்ப முக்கியம். சரியாக ரெஸ்பாண்ட் செய்யவேண்டும்.இல்லாவிட்டால் ஹோட்டலில் உங்கள் பெயரில் இருக்கை இருக்காது. தப்பும் உங்களுடையதாகிப் போய்விடும்.

திருமணம் செய்யப் போகும் நண்பனை பார்த்து பலரும் நெகிழ்ச்சியாய் விசாரித்தார்கள். "ஆர் யூ ஸ்யூர் மேன் நல்லா யோசித்து பாத்தியாடா"என்றார்கள்.
"ஆமாம்" என்றான் புன்னகைத்துக்கொண்டே.
"You are dead man" என்றார்கள்.



சிறு பாறைகளை
அகற்றிவிட்டால்
சிற்றோடைக்கு
சலசலக்கும்
இன்னோசை உண்டோ?

ராணி முத்து புதினம் "கல்யாணத்தின் கதை" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Raani Muthu Kalyanathin Kathai Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Saturday, October 04, 2008

மனதில் உறுதி வேண்டும்

இண்டர்நெட் என்ற வார்த்தையை இணையம் என தமிழ்படுத்தியதாக முதலில் ஏதோ ஒரு வலையகத்தில் படித்தபோது சற்று வேடிக்கையாகத்தான் இருந்தது. இப்போது அந்த வார்த்தையே நம்மிடையே ஒரு சாதாரண தமிழ் வார்த்தையாக ஒன்றிப்போனது. எல்லாம் எழுதும்போது மட்டும் தான். பேச்சு வழக்கில் இன்னும் அந்த வார்த்தையை உபயோகிக்க தைரியம் வரவில்லை. இது போலத்தான் ”கணிணி”யும். எழுதும் போது மட்டும் ”கணிணி” என எழுத தைரியம் வரும் நமக்கு பேச்சு வழக்கில் கம்ப்யூட்டர் என்ற வார்த்தைதான் முந்துகிறது. சுத்த தமிழில் பேச தமிழ் வார்த்தைகள் தெரியவேண்டும் என்பதைவிட தைரியம் வேண்டும் என்பதுதான் உண்மைபோல் தோன்றுகிறது. என்ன செய்வது சுற்றி இருக்கும் தமிழர்கள் நாம் ”தமிழில்” பேசுவதை வேடிக்கை பார்ப்பார்களே.

அன்பு நண்பர் V.Subramanian அவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய சில தமிழ்ப் பெயர்களின் தொகுப்பு கீழே. நன்றி அய்யா.

வ.எண் பிற மொழிப்பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் வணிக மையம்
2 கார்ப்பரேஷன் நிறுவனம்
3 ஏஜென்சி முகவாண்மை
4 சென்டர் மையம், நிலையம்
5 எம்போரியம் விற்பனையகம்
6 ஸ்டோரஸ் பண்டகசாலை
7 ஷாப் கடை, அங்காடி
8 அண்கோ குழுமம்
9 ஷோரூம் காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் மரக்கடை
18 பிரிண்டரஸ் அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் இனிப்பகம்
24 காபி பார் குளம்பிக் கடை
25 ஹோட்டல் உணவகம்
26 டெய்லரஸ் தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் துணியகம்
28 ரெடிமேடஸ் ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் திரையகம்
30 வீடியோ சென்டர் ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் நிதியகம்
33 பேங்க் வைப்பகம்
34 லாண்டரி வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் கல்நார்
41 ஆடியோ சென்டர் ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ தானி
43 ஆட்டோமொபைலஸ் தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் தானிப் பணியகம்
45 பேக்கரி அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் மின்கலப் பணியகம்
47 பசார் கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் உண்டுறை விடுதி
52 பாய்லர் கொதிகலன்
53 பில்டரஸ் கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் கம்பிவடம், வடம்
55 கேபஸ் வாடகை வண்டி
56 கபே அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் சீட்டு நிதி
62 கிளப் மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் குளம்பியகம்
65 கலர் லேப் வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் கூட்டு நிறுவனம்
71 கூரியர் துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் மிதிவண்டி
74 டிப்போ கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் மிதிவண்டியகம்
82 பேக்டரி தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் விரை உணா
85 பேகஸ் தொலை எழுதி
86 பைனானஸ் நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் வண்ண அச்சகம்
93 லாட்ஜ் தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் நலம் பேணகம்
96 பேஜர் விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் கன்னெய், எரிநெய்
102 பார்மசி மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் விசைத்தறி
109 பவர் பிரஸ் மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் தாவளம், உணவகம்
112 ரப்பர் தொய்வை
113 சேல்ஸ் சென்டர் விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வணிக வளாகம்
115 ஷோரூம் காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் வங்குநர்,
120 ஸ்டேஷனரி தோல் பதனீட்டகம்
121 டிரேட் வணிகம்
122 டிரேடரஸ் வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் தேனீரகம்
126 வீடியோ வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் படிபெருக்கி, நகலகம்
129
130
எக்ஸ்ரே
ரெடிமேட் ஜுவெல்லரரி மார்ட்
ஊடுகதிர்
ஆயத்த அணிகலன் அங்காடி



மூலம்: தெரியவில்லை


காண்பது அனைத்தையும்
சந்தேகம் கொண்டு பார்
-லெனின்
"என் சரித்திரம்" டாக்டர் உ.வே.சா-வின் சுய சரித்திர வாழ்க்கை வரலாற்றுக் கதை இங்கே
தமிழில் சிறு மென் புத்தகமாக. En sarithiram Vu.Vea.Sa Life history in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, October 01, 2008

பாதையை மாற்ற ஹேக்கிங்

திரைப்படங்களில் பார்த்திருப்போம். கதாநாயகன் எதாவது ”ஃபீல்டு வொர்க்குக்கு” சென்றிருக்க கதாநாயகியை வில்லனின் ஆட்கள் கடத்திவந்து விடுவர். தொழில்நுட்பம் போகின்ற போக்கில் இனிமேல் கதாநாயகியை இப்படி ஆட்களை வைத்து கடத்த வேண்டாம் போலிருக்கின்றது. அவளது ”மினி கூப்பர்” காரே அவளை வில்லன் வீட்டுக்கு கொண்டு வந்துசேர்த்துவிடும். எப்படி என்கின்றீர்களா? அந்த வில்லனுக்கு கொஞ்சம் GPS ஹேக்கிங் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.

GPS என்பது வழி தெரியாதவர்களுக்குக் கூட வழிகாட்டும் ஒரு கையடக்கமான சாதனம். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் சேட்டலைட்டுகள் அனுப்பும் அலைகள் உதவியோடு நீங்கள் சாலையில் போக வேண்டிய இடத்துக்கு வழிகாட்டும். இதுமாதிரியான அலைகளை பூமியில் ஹேக்கர்களே செயற்கையாக உருவாக்கி உலவவிட்டு ஷாப்பிங் போக மால் தேடும் கதாநாயகியின் காரின் GPS-ஐ குழப்பத்தில் ஆழ்த்தி அதை தங்கள் வசப்படுத்துவதுதான் இங்கு சாமர்த்தியம். இது சாத்தியம் என சில Cornell University பெரிசுகள் நிரூபித்து காட்டியிருக்கின்றார்கள்.

இப்போதைக்கு பள்ளிக்கூட பொடிசும் செய்யும் அளவுக்கு இந்த GPS ஹேக்கிங் ஒன்றும் அத்தனை எளிது அல்ல. மிலிட்டரி அளவில் யோசிக்கின்றார்கள். எங்கோ செல்ல வேண்டிய பட்டாளத்தை இன்னொருபுறமாய் திசைத் திருப்பிச் சென்றுவிட வைக்க இதனால் முடியும். ஈராக் போக வேண்டிய அங்கிள் சாமின் தளவாடங்கள் இப்படி GPS ஹேக்கப்பட்டு ஈரான் சென்றால் மூன்றாம் உலகப்போர் நிச்சயம். சாவேசும் புடினும் சேர்ந்துக்குவர். எதற்கும் GPS -சோடு கையில் ஒரு காகித அட்லஸையும் வைத்திருத்தல் இப்போதைக்கு புத்திசாலித்தனம்.

இப்படித்தான் GPS-ஐ முழுசாக நம்பி ரோட்டில் ஏமாந்தவர்களையும் கேள்விப் பட்டிருக்கின்றேன். பக்கத்து பர்கர்கிங்கை தேடிச் சென்றவரை அது எங்கோ ஒரு காட்டிற்குள் கொண்டு விட்டதாம்.



செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,
செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
-பெர்னாட்ஷா
சுஜாதா "மீண்டும் ஜீனோ" விஞ்ஞானப் புதினம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Sujaatha Meendum Jeeno Science fiction story pdf in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்